Jun 13, 2015

தொலைந்த தலைப்பு!

இக்கதை நண்பர் “நெல்லை ந.சங்கர்” அவர்களின் முதல் எழுத்து முயற்சி. நண்பர் மேலும் எழுத கதை சொல்லிகளின் வாழ்த்துகள்!

“மச்சீ... அப்பா லைன்-ல இருக்கார்...!
போன் எடுக்காத அளவுக்கு என்னடா வேல....? இந்தா பேசு....” – நிமிர்ந்து பார்த்தேன், கதிரேசன். யோசனையோடு போனை காதில் இருத்தினேன்.

“சொல்லுங்கப்பா... அம்மா எப்படி இருக்காங்க??...”

“ம்ம்... நல்லா இருக்கா... நீ எப்படி இருக்க?...” – அப்பாவின் குரலில் வழக்கம்போல பரிவு தெரிந்தது.

“வேல வேலைன்னு ரொம்ப கஷ்டப்படுற... ஊரில வந்து ஏதாவது வியாபாரம் பண்ணி சம்பாதிக்கலாமேடா... வயசான காலத்துல எங்களுக்கும் கூட இருந்த மாதிரி இருக்கும்னு சொன்னா கேட்கமாட்டேங்கிற...!!...”

“......” மௌனமாயிருந்தேன்!...

“புரியுது... இப்பல்லாம் ‘விவசாயி’ன்னா யார் மதிக்கிறா...
முப்போகம் விளைஞ்ச பூமில்லாம் கான்கிரீட்டால்ல ஆயிருச்சு...
சரி... இந்த வாரம் ஊருக்கு ஒரு எட்டு வந்துட்டுப் போ. அப்பா போனை வச்சுடுறேன்!!..”

மனசு கனத்தது!


“தேங்க்ஸ் டா மச்சான்!...” போனைக் கொடுத்தேன்.

சிறுவயதில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் பசும் விளைநிலம் நினைவில் வந்து போனது. எத்தனைமுறை வரப்பில் சரியாக ஓட முடியாமல் விழுந்திருக்கிறேன்!

எத்தனைமுறை நெருஞ்சி முட்களை மிதித்து அழுதிருக்கிறேன்...!

எத்தனைமுறை சோளக்காட்டுக்குள்ளும், வாழைத் தோப்புக்குள்ளும் உருண்டு பிரண்டிருக்கிறோம்...!

எத்தனைமுறை கடற்கரை நாடார் தோட்டத்து கிணற்றில் முங்கு நீச்சல் அடிச்சிருக்கேன்... கடைசியாக அதே கடற்கரை நாடார் ஒரு ஏஜண்டுக்கு நிலத்தை விற்றுவிட்டு அழுது கொண்டே சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது!...

மனசு இன்னும் வலித்தது.

“கதிர், ஒரு காபி சாப்பிடலாமா...??”

ஏறிட்டுப் பார்த்தான். “என்னடா, மறுபடியும் ஃபீலிங்க்ஸா...?”

கார்ரிடாரில் நடக்க ஆரம்பித்தோம்.

“என்ன... மறுபடியும் ஊரு நெனைப்பா?...”

“ம்ம்...!!”

“சாரிப்பா... நான் சென்னைய தாண்டுனதில்ல. அதனால என்னால ஏதும் உணரமுடியலை...!”

உண்மைதான்! சென்னைவாசிகளுக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்...! – மௌனமாக மனசு கேட்டுக்கொண்டது.

“நான் ஒன்னு சொல்லட்டா...? இங்க இருந்து யாரோ ஒருத்தனுக்கு ராவும் பகலும் கஷ்டப்படுறதை ஏன் உங்க ஊரில உனக்காக செய்யக்கூடாது?...”

“டேய், வழியில்லாமத்தானே சாப்ட்வேரில குப்பைக் கொட்டிட்டு இருக்கேன்...!!?!”...
.........
.........

“எல...இன்னும் தூங்கலியா...?
எப்பப்பாரு கதை....கதைன்னு எதையாவது கிறுக்கறதே வேலையாப் போச்சு....
இந்த நேரத்துக்கு ஒழுங்கா புத்சகத்தை படிச்சாலாவது அரியர் இல்லாம இருக்கும்... போய் லைட்ட ஆப் பண்ணிட்டு தூங்குல....
மணி பன்னெண்டு ஆவுது!... கதை எழுதுறானாம்...கதை...!...”

- அம்மா அலுத்துக்கொண்டாள்!  இமைகளை மூடிக்கொண்டேன்!