Apr 25, 2014

பிரபஞ்சன்!

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் ஏப்ரல் 27, 1945-ல் புதுச்சேரியில் பிறந்தார். தமிழ் வித்வான் பட்டம் பெற்ற இவர், தமிழ் ஆசிரியராய்ப் பணியாற்றி, பின் குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய இதழ்களிலும் பணியாற்றினார். 1961-ல் பிரபஞ்சன்-இன் முதல் சிறுகதையான ‘என்ன உலகமடா’ பரணி இதழில் வெளியானது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கதைகளும், கட்டுரைகளும் தாமரை, தீபம், கண்ணதாசன், கணையாழி போன்ற பல இதழ்களில் வெளிவந்தன. 1982-ல் வெளியிடப்பட்ட இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ தமிழக அரசின் பரிசைப் பெற்றது. 

1995-ல் ‘வானம் வசப்படும்’ நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார். மேலும், புதுச்சேரி அரசு விருது, பாரதீய பாஷா பரிஷத் விருது, கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது (மகாநதி), இலக்கியச் சிந்தனை விருது (மானுடம் வெல்லும்), ஆதித்தனார் விருது (சந்தியா)  போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பிரபஞ்சன் அவர்களின் படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடா, ஆங்கிலம், ஜெர்மனி, பிரெஞ்சு மற்றும் சுவீடிஷ் மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சில சிறுகதைகளும், நாடகங்களும் பல்வேறு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் வைக்கப்பட்டுள்ளன. 

நீல.பத்மநாபன்!

எழுத்தாளர் நீல.பத்மநாபன் அவர்கள் ஏப்ரல் 26, 1938-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். தமிழில் குறிப்பிடத்தக்க இலக்கியவாதிகளில் ஒருவரான இவர், 20 நாவல்கள், 170 சிறுகதைகள், 160 கவிதைகள், மற்றும் 150 கட்டுரைகளையும் இதுவரை எழுதியுள்ளார். இவரது முதல் நாவலான “தலைமுறைகள்”, எழுத்தாளர் க.நா.சு. அவர்களால் ‘இந்தியாவின் சிறந்த பத்து நாவல்களில் ஒன்று’ எனப் பாராட்டப்பட்ட நூலாகும்.

நீல.பத்மநாபன் அவர்கள் சாகித்திய அகாதமி விருது (இலை உதிர் காலம்), ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது (உறவுகள்), தமிழ்நாடு அரசு மாநில விருது (தேரோடும் வீதி), தமிழ் அன்னை விருது, பாரதீய பாஷா விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு இவரின் பங்களிப்பைப் பாராட்டி ‘இலக்கிய சிந்தனை’ அமைப்பு சிறப்பு செய்துள்ளது.

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக நீல.பத்மநாபன் அவர்கள், ‘நீல பத்மம்’ என்னும் சிறந்த கவிதைக்கான விருதையும், ‘தலைமுறைகள்’ என்னும் சிறந்த சிறுகதைக்கான விருதையும் நிறுவி, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் வாயிலாக ஆண்டு தோறும் வழங்கி வருகிறார்.

தமிழ்மொழி அல்லாமல், இவர் மலையாளம் மற்றும் ஆங்கில இலக்கியங்களுக்கும் பெரும்பங்காற்றி வருகின்றார். நீல.பத்மநாபன் அவர்களின் படைப்புகள் மலையாளம், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளிலும், அயல் மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளன. 

புதுமைப்பித்தன்!

எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்கள் ஏப்ரல் 25, 1906-ல் திருப்பதிரிப்புலியூர் என்னும் ஊரில் பிறந்தார். 1931-இல் சென்னை வந்த இவர், 1933-ல் ‘காந்தி’ இதழில் வெளிவந்த “குலாப்ஜான் காதல்” என்னும் கட்டுரை மூலம் தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார். 

1934-ல் மணிக்கொடி-யில் ‘ஆற்றங்கரைப் பிள்ளையார்’ சிறுகதையைத் தொடர்ந்து இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கின. கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ் மணி, தினமணி போன்ற பல இதழ்களிலும் ‘புதுமைப்பித்தனின் படைப்புகள் தொடர்ந்தன. 1940-ல் ‘புதுமைப்பித்தன் கதைகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. பின் இவர் தமிழ்த்திரைத் துறையிலும் சிலகாலம் கதையாசிரியராகப் பணியாற்றினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதியிருந்தாலும், புதுமைப்பித்தன் அவர்களின் சிறுகதைகளே எழுத்துலகில் முதன்மையாகக் கருதப்படுகின்றன. இவரின் புதுமையான எழுத்தாளுமை பிற எழுத்தாளர்களிடமிருந்து இவரை வேறுபடுத்தி நிற்கச்செய்தது. சிறுகதைகளைப் போலவே புதுமைப்பித்தன் மொழியாக்கம் செய்த நூல்களும் இவருக்கு மேலும் பெருமை சேர்த்தன. 

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் கொண்ட இந்த எழுத்தாளரின் படைப்புகள் 2002-ல் தமிழக அரசால் தேசியமயமாக்கப்பட்டது.

Apr 23, 2014

மெசபொடேமியா முதல் யுனெஸ்கோ வரை!

"There is no friend as loyal as a Book." 
-Ernest Hemingway


“உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்” [ஏப்ரல் 23] சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு தினமாக இன்றைய சமூகத்தில் புதிய ஒரு அங்கீகாரம் பெற்றுள்ளது உலக புத்தக ஆர்வலர்களுக்கு பேருவகையான செய்தியாகும். என்ன விசேஷம் இந்த நாளுக்கு? ஏப்ரல் 23-இந்த நாளை உலக இலக்கியத்திற்கான நாள் எனப் பொதுவாகச் சொல்லலாம். ஆம்! இங்கிலாந்தின் தேசியக்கவி வில்லியம் ஷேக்ஸ்பியர், ஸ்பெயின் நாட்டின் செர்வாண்டஸ் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா போன்ற உலகப் பெரும் இலக்கியவாதிகளின் நினைவுநாள் இன்று தான். இதன் நிமித்தமாக 1995-ஆம் ஆண்டு பாரிஸ்-ல் நடந்த யுனெஸ்கோ (UNESCO) மாநாட்டில் இத்தினத்தை ஓர் இலக்கியச் சிறப்புமிக்க நாளாக அனுசரிக்க உத்தேசித்து, புத்தகங்களையும் நூலாசிரியர்களையும் சிறப்பிக்கும் வகையில் ‘உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தின’ மாக (World Books and Copyright Day) அறிவிப்பு செய்யப்பட்டது.

அன்று தொட்டு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 அன்று உலக நாடுகளில் புத்தகங்கள் தொடர்பான இலக்கியக் கூட்டங்கள், போட்டிகள், புத்தகத் திருவிழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. நூலாசிரியர்கள் நம் சமூகத்திற்கு ஆற்றும் அளப்பரிய சேவைகளையும், புத்தகங்களின் சமூகப் பங்கையும் போற்றி, புத்தக ஆர்வலர்களை ஊக்குவிக்கவும் இத்தினம் யுனெஸ்கோ அமைப்பினால் தொடங்கப்பட்டது.

அது சரி! அது என்ன புத்தகங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் என்ற கேள்வி புத்தக ஆர்வலர் அல்லாதோருக்கு எழலாம். ஆம்! புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது நம்முடைய மற்றும் நாம் சார்ந்த சமூகத்தின் பெருங்கடமை! நாகரிகம் தோன்றிய காலம் தொட்டே மனிதர்களுடைய எண்ணங்களையும், தகவல்களையும் வெளிப்படுத்தக் கூடிய முக்கியமான தொடர்பு கருவிகளாக புத்தகங்கள் இருந்து வந்துள்ளன. இப்போது இருப்பது போல இணையம் இல்லாத அந்த கால கட்டத்தில், முன்னோர்கள் செய்து வைத்த தகவல் களஞ்சியங்கள் இந்தப் புத்தகங்கள். நமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ஒரு சமூகத்தின், ஒரு இனத்தின் செயல்பாடுகள், அவர்களின் வாழ்வின் முறைகள் குறித்த தகவல்களை புத்தகங்கள் வாயிலாகத் தான் நாம் அறிய முடிந்தது.

மனிதனின் சிந்தனை வளர்ச்சி எவ்வாறு காலம் காலமாக மாறி வந்திருக்கிறது என்பதை அறிய புத்தகங்களே சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைந்திருக்கின்றன. இத்தகைய புத்தகங்களைச் சிறப்பிப்பதற்காக இந்த நாளினை அனுசரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப் பட்டுள்ளோம்; குறிப்பாக புத்தக ஆர்வலர்கள்! பிற நாடுகள் தவிர்த்து, பல்வேறு வகையான மதம் மற்றும் பண்பாட்டு விழாக்களுக்கு பெயர்பெற்ற தென்-கிழக்கு ஆசிய நாடுகளிலும் கூட புத்தகத்திற்கென ஒரு நாள் வைத்து கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்தி! இந்த அளவிற்கு புத்தகங்களின் ஆதிக்கம் நம்மிடையே கூடியிருக்கிறது! 

“உலகின் பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப் பட்டபோது புத்தகங்கள் தான் என்றாராம் மார்டின் லூதர் கிங்!”  ஆம்! உண்மையில் இந்த உலகம் இவ்வாறான பண்புகளைக் கொண்டிருக்க அடிப்படைக் காரணம் புத்தகங்கள் வாயிலாக நாம் பெற்ற செய்திகளே!

இத்தகைய புத்தகங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களையும், மாறுதல்களையும் கடந்து வந்திருக்கின்றன. கி.மு. 3500-ல் மெசபொடேமிய சமவெளிகளில் வாழ்ந்த சுமேரியர்களே முதன்முதலில் எழுத்தின் பயன்பாட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். மெசபொடேமிய நாகரிக மக்கள் தங்களுடைய கருத்துக்களை மற்றவர்க்கு சைகைகள் மூலமாகத் தெரிவிக்கத் தொடங்கி, பின்னர் அது மொழியென வளர்ச்சி பெற்றது. அறிவின் வளர்ச்சியால் மனிதன் தன்னுடைய எண்ணங்களை, தனக்குப் பின் வரும் சந்ததியினருக்கும் தெரிவிக்க எண்ணி கோடுகள் போன்ற குறியீடுகளைக் கண்டுபிடித்தான். இதுவே பண்டைய நாகரிக மேம்பாட்டின் முக்கிய காரணமாய் அமைந்த எழுத்தின் பரிணாம வளர்ச்சி!

பண்டைய மனிதர்கள், அவர்கள் கண்டுபிடித்த கோடுகளையும், வளைவுகளையும் தாங்கள் வாழ்ந்த குகைகளிலும், பாறைகளிலும் பதிவு செய்தனர். ஆனால், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அவர்கள் புலம் பெயரும் பொழுது இந்த செய்திகளை அவர்களால் தங்களுடனேயே கொண்டு செல்ல இயலவில்லை. எனவே பயணப்படும்போது எளிதில் கொண்டு செல்லும் வகையில் பெரிய கற்கள், ஓடுகள் போன்றவற்றில் செய்திகளைப் பதிவு செய்தார்கள். இவ்வகையான பொருட்களும் எளிதில் பயன்படுத்தக் கூடியதாய் இல்லாமல் போகவே, மீண்டும் அவர்கள் எளிதில் கிடைக்கக் கூடியதும், சிரமமின்றி எழுதக் கூடியதுமாகிய பொருட்களை உபயோகித்தனர். அவ்வகையில் மெசபொடேமிய சமவெளிகளில் அதிகம் கிடைக்கக் கூடியதான களிமண்ணைக் கொண்டு வில்லைகள் (Clay Tablets) செய்து, அதில் எழுத்துக்களைப் பதித்து அவற்றை நெருப்பில் சுட்டுப் பாதுகாத்தனர். சுமேரியர்களின் Cuneiform என்னும் இந்த எழுத்து முறையே உலகின் மிகப் பழமையான எழுத்து முறையாகும்.

காலப்போக்கில் இந்த களிமண் வில்லைகளும் செய்திகளை வேறிடத்திற்குச் சொல்ல வசதியாக அமையாததால், கி.மு. 3000-ல் ‘பாப்பிரஸ்’ (Papyrus) எனப்படும் ஒரு வகை நீர்த் தாவரத்தைப் பயன்படுத்தினர். இவற்றை அதன் தன்மைக்கேற்றவாறு பதப்படுத்தி, சுருல்களாகவோ, பட்டைகளாகவோ (Scrolls & Stripes) வடிவமைத்து எழுதினர். பண்டைய நாகரிகங்களில் பெரும்பாலான புத்தகங்கள் இந்த ‘பாப்பிரஸ்’ கொண்டே எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் சில புகழ்ப்பெற்ற ‘அலெக்ஸாந்திரியா நூலக’த்தில் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

எகிப்த்தியர்கள் பாப்பிரஸ் பயன்படுத்தியது போல, கி.மு. 1500-களில் சீனாவில் மூங்கில் பட்டைகள் (Bamboo Stripes) புத்தகங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்பட்டன. இவ்வகைப் புத்தகங்கள் கி.மு. 500 வரை பரவலாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. பின், கி.மு.400 காலகட்டத்தில் ஆடுகளின் தோள்களைப் பதப்படுத்தி ‘பார்ச்மெண்ட்’ (Parchment) எனப்படும் எழுதும் ஏட்டினைக் மீண்டும் எகிப்தியர்களே கண்டுபிடித்தனர். பாப்பிரஸ்-ன் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் தட்டுப்பாட்டினை சமாளிக்கவும் ஒரு மாற்றாகவே இந்த ‘பார்ச்மெண்ட்’-கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அக்காலத்தில் வாழ்ந்த எகிப்திய பண்டிதர் ரோமன் வாரோ குறிப்பிடுகிறார். இவை தரமான எழுது பொருளாக இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. மேலும் ‘பார்ச்மெண்ட்’-களில் சிறந்த தரமானவை ‘வெல்லம்’ (Vellum) எனக் குறிக்கப்பட்டன.

கி.மு. 200 காலத்தில் இந்த எழுத்து உபகரணங்கள் மேலும் பல வடிவங்கள் பெறுகின்றன. அந்த சமயத்தில் கிரேக்க மற்றும் ரோம் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது தான் மெழுகை பயன்படுத்தி எழுதும் முறை (Wax Tablets). சிறிய மரப்பலகைகளின் மீது மெழுகை பரப்பி, அதன் மீது ‘Stylus’ எனப்படும் கூர்மையான எழுதுபொருள் கொண்டு எழுதுவது இதன் பண்பாகும். இதன் மூலம் மக்கள் ஒருமுறை எழுதியதை (மெழுகின் உருகும் தன்மையால்) மீண்டும் எளிதில் அழித்து எழுதும் முறையைக் கற்றனர். இவ்வகை மெழுகு வில்லைகளை ஒன்றுசேர்த்து அவற்றை வட்டமான உலோகம் கொண்டு இணைத்து (இன்றைய spiral பைண்டிங் போல) ஒரு முழுப் புத்தகமாக உருவாக்கினர். ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ‘Codex’ என அழைக்கப்பட்ட இவ்வகைப் புத்தகங்கள் சுருள் வடிவ புத்தகங்களுக்கு ஒரு மாற்றாக அமைந்தன.


மேலும் இதே கி.மு.200-களில் இந்தியாவில் பூர்ஜ் மரப்பட்டைகள் எழுதுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. பழங்கால புத்தமத உரைகள் இவ்வகை ‘Birch Bark’ –களிலேயே எழுதப்பட்டன. இவை தவிர இந்தியாவில் கற்கள், உலோகத் தகடுகள், பனை ஓலைகள், துணிகள் ஆகியவை முக்கியமான எழுது பொருள்களாக பயன்பட்டன.

இப்படியாக வடிவங்கள் மாறி மாறி புத்தகங்கள் மக்களிடையே தங்களைப் புகுத்திக் கொண்டிருந்த காலத்தில் கி.பி.105-ல், சீனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த பேப்பர் கண்டுபிடிப்புக்கு சுவையான ஒரு கதையும் உள்ளது. சீனாவில் சாங் மன்னர் அரசவையில் பணிபுரிந்த ‘சை லூன்’ (Cai Lun) என்பவர் எழுதுவதற்கு துணிகளைத் துவைத்து கஞ்சிபோடும் போது கொஞ்சம் கீழே சிந்தி விட்டதாம்! அப்படி சிந்திய கஞ்சி, கீழே கிடந்த நார்ப்பொருட்களின் மீது விழுந்து, அது காய்ந்ததும் தட்டையான, வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருந்தது. இதைக் கண்டதும் அதிகாரி ‘லூன்’-ன் மூலையில் பொறி தட்டுகிறது. உடனே அவர் மல்பெரிச் செடி, மரப்பட்டைகள், நார்ப்பொருட்கள், மீன் வலை மற்றும் கஞ்சி சேர்த்து காகிதம் தயாரிக்கிறார். இவருடைய இந்த முயற்சி வெற்றி பெறவே, அந்த காகிதங்களை மன்னருக்கு அவர் அன்பளிப்பாகத் தருகிறார். இந்த மன்னர் இறந்தபோது அவருடன் சேர்த்து அவர் பயன்படுத்திய பொருட்களும் புதைக்கப்பட்டன. இதுவே காகிதம் பிறந்த கதை எனச் சொல்லப்படுகிறது. அக்காலம் முதலே சீனாவில் காகிதம் பயன்பாட்டிற்கு வந்தது. பின்னர் 19-ஆம் நூற்றாண்டில் சீனாவில் நடந்த தொல்பொருள் ஆய்வுகளில், சாங் மன்னரின் கல்லறையில் இந்த பண்டைய காகிதம் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் பயன்பாட்டுக் காலம் வரலாற்றறிஞர் டாக்டர்.கோல்டுஸ்டெயின் என்பவரால் கணிக்கப்பட்டது.


பல ஆண்டுகாலமாக இந்த காகிதம் தயாரிக்கும் முறையை சீனர்கள் ரகசியமாகவே வைத்திருந்தனர் (பட்டுத் தயாரிக்கும் முறை போலவே). சீன நாகரிகம் பரவத் தொடங்கியதும், கூடவே இந்த காகித தயாரிப்பின் ரகசியமும் கி.பி. 345-ல் கொரியாவிற்கும், கி.பி.610-ல் ஜப்பானுக்கும் பரவியது. பின்னர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் நடந்த ‘சமர்கந்த்’ போருக்குப் பின் அரேபியாவிற்கும், அங்கிருந்து கி.பி.793-ல் பாக்தாது, கி.பி.900-ல் எகிப்து, கி.பி.1100-ல் மொராக்கோ, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளுக்கும், 1200-ல் இத்தாலி, கி.பி.1312-ல் ஜெர்மனி மற்றும் கி.பி.1328-ல் ஹாலாந்து நாட்டிற்கும் காகித தயாரிப்பு முறை பரவியது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இம்முறை கி.பி.15 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில் பரவியது.

இவ்வளவு பெரிய வரலாறு கொண்ட காகிதங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் பேப்பர் பயன்பாடு இருந்ததாக கி.மு. 327-ல் இந்தியாவிற்கு அலேக்ஸாந்தரின் படையெடுப்பின் போதுவந்த, அவரது தளபதிகளில் ஒருவரான ‘நிர்சஸ்’ (Nearchus) என்பவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பூனா பேராசிரியர் ஒருவர் தனது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார்.

பின்வந்த காலங்களில், எழுத ‘மை’-யும் (Ink) கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மக்கள் காகிதத்தில் எழுதத் தொடங்கினர். ஆயினும், பெரும்பாலான மக்கள் ‘பார்ச்மெண்ட்’-களிலேயே பரவலாக எழுதி வந்தனர். வெறும் கோடுகள், வளைவுகள், மற்றும் எழுத்து வடிவங்களாக இது வரை எழுதப்பட்டு வந்த புத்தகங்களில் மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி வண்ண ஓவியங்களும் (Illustrations) இடம் பெறத் தொடங்கின.

இதற்குப் பின்னர் கைகளால் எழுதும் முறை தவிர்த்து சீனாவில் ‘அச்சு முறை’ (Block Printing) பயன்பாட்டிற்கு வந்தது. இது கி.பி.220-களில் மரக்கட்டைகளில் உருவங்களைச் செதுக்கி, மையில் தோய்த்து, துணிகளில் அச்சு எடுக்கப் பயன்படுத்தப்பட்ட முறையாகும். இம்முறையைப் பயன்படுத்தி கி.பி.868-ல், முதல் ‘காகிதத்தில் அச்சிடப்பட்ட புத்தகம்’ (1st paper printed book) வெளிவந்தது.


ஒருவழியாக காகிதம் கண்டுபிடித்தாயிற்று! மை-யும் கண்டுபிடித்தாயிற்று! ஒருபடி மேலே போய் கைகளால் செய்யப்பட அச்சுகளும் கண்டுபிடித்தனர். ஆயினும் மனிதனின் இந்த அதிவேக அறிவு வளர்ச்சி தடைப்பட்டு ஒரு புள்ளியில் நிற்காமல், 1440-ல் ஜெர்மனி-யைச் சேர்ந்த Johannes Gutenberg என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார். மேலும் 1798-ல் Nicholas Louis Robert என்பவரால் காகிதம் தயாரிக்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப் படுகிறது. பின்னர், 1476-ல் William Caxton என்பவரால் Westminister நகரில் அச்சகம் ஒன்று தொடங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து 16-ஆம் நூற்றாண்டுகளில் மேலும் பல அச்சகங்கள் பல்வேறு நாடுகளிலும் இயக்கப்பட்டன. இப்போது புத்தகங்கள் சிரமமின்றி, எளிதில் அச்சிடப்பட்டு வெளிவர ஆயத்தமாகின்றன.

இதைப் போலவே இந்தியாவிலும் போர்த்துகீசியர்களால் கோவா-வில் அச்சகம் தொடங்கப்பட்டது. அதில் முதல் நூலாக இந்த இயந்திர முறைகளைப் பயன்படுத்தி இந்தியாவில் 1578-ல் ‘DOCTRINA CHRISTAM’ என்ற நூல் தமிழில் ‘தம்பிரான் வணக்கம்’ என்ற பெயருடன் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. இதற்கு முன்பே 1554-ல் லிஸ்பன் நகரில் ‘கார்டிலா’ என்ற நூல் தமிழ்மொழியில் அச்சிடப்பட்டது. ஆயினும் ‘DOCTRINA CHRISTAM’ நூலே இந்திய மொழியில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது.

பின்னர் தென் இந்தியாவிற்கு வந்த Bartholomäus Ziegenbalg (சீகன் பால்க் ஐயர்) 1714-ல் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பை அச்சிட்டு வெளியிடுகிறார். இதைபோலவே உலகின் பல்வேறு நாடுகளிலும் நூல்கள் அச்சிடப்பட்டு மக்களைச் சென்று சேர்ந்தன. இப்படியாக அச்சுப் புரட்சி நடந்து கொண்டிருந்த வேளையில், இத்தாலியைச் சேர்ந்த Aldo Manuzio il Vecchio என்பவர் வெனீஸ் நகரில் Aldine அச்சுக்கூடத்தை நிறுவுகிறார். இவர்தான் எழுத்துருவில் சிறிய மாற்றமொன்ரைப் புகுத்த எண்ணி Italian Typeface என்னும் சாய்வாக எழுதும் முறையையும், அரைப்புள்ளிகளின் (Semi-colon) பயன்பாட்டையும் அச்சுகளில் புகுத்துகிறார். மேலும் இவர் சிறிய அளவிலான கையடக்கப் புத்தகங்களை (Pocket Books) கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் அச்சிட்டு வெளியிடுகிறார். இவ்வாறு இவரின் கையடக்க சாய்வெழுத்து நூலாக Virgil எழுதிய "Opera" 1501-ல் வெளிவந்தது.

இதற்குப்பின்னர், 1832-ல் Walter Scott என்பவர் எழுதிய கதைகளின் தொகுப்பு நூல் "The Keepsake" அல்லது  “The Annual" என்னும் பெயரில் நூல் அட்டைக்கு மேலே பாதுகாப்புடன் கழற்றி பொருத்தும் வகையில் காகித மேலட்டைகளுடன் (Paper Jackets) வெளிவந்தன. பிற்பாடு தோல் மற்றும் துணிகளும் பயன்படுத்தப்பட்டன. 1832 தொடங்கி கதை மற்றும் நாவல்கள் அதிகமாக அச்சிடப்பட்டு மக்கள் வாங்கும் வகையில், குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.


இவ்வாறுதான் புத்தகங்கள் மக்களைத் தேடி படையெடுத்து வரத்தொடங்கின. மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், மனித அறிவின் அபரிமித வளர்ச்சியாலும் இப்புத்தகங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு வடிவங்களைத் தாங்கி நம்மிடையே பரவியுள்ளன. மெதுவாக, 2000 ஆண்டுகளில், அச்சு நூல்களில் இருந்து மின் நூல்கள் வெளிவரத் தொடங்கின. பின்னர் குறுந்தகடு நூல்களும், இணைய நூல்களும் வெகுவாக மக்களைக் கவரத் தொடங்கின. இவற்றின் காரணமாக புத்தகங்களை தரவிறக்கம் செய்து, மக்கள் செல்லும் இடமெல்லாம் படிக்கும் வகையில் இணையம் உறுதுணையாக இருந்து வருகிறது. இதுவே புத்தகங்களின் நீண்ட வரலாறு.

எவ்வாறாயினும், எவ்வடிவில் இருந்தாலும் மனிதனின் உற்ற தோழனாக புத்தகங்கள் எக்காலத்திலும் இருந்துவந்துள்ளன. ஒரு நாட்டின் சக்தியை புத்தகங்களைக் கொண்டே தீர்மானிக்கும் காலத்தில் நாமிருக்கிறோம். ஏனெனில் இவ்வுலகில் உள்ள அனைத்திற்கும் ஆதாரமாக புத்தகங்களே நிலைத்திருக்கின்றன!

புத்தகங்களை வாசிப்போம்! நேசிப்போம்!

“உலக புத்தக தின வாழ்த்துகள்!” – கதைசொல்லிகள் 

குறிப்புதவி நூல்: 'நூல்கள்: பயன்பாடும், பாதுகாப்பும்',
ஆசிரியர்: முனைவர்.ப.பெருமாள்

Apr 9, 2014

சர்வதேச சிறப்பு நூலகர்கள் தினம்!

சர்வதேச சிறப்பு நூலகர்கள் தினம்! [ஏப்ரல் 13]

‘சர்வதேச சிறப்பு நூலகர்கள் தினம்’, [International Special Librarian’s Day] சிறப்பு நூலகர்களையும், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறைக்கு அவர்களின் தனிப்பட்ட பங்களிப்புகளையும் சிறப்பிக்கும் விதமாக செயற்படுத்தப்படுகிறது. இத்தினம் சிறப்பு நூலகங்கள் இயக்கம் [Special Libraries Association (SLA)] என்னும் இயக்கத்தினால் 1991-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

சர்வதேச சிறப்பு நூலகர்கள் தினத்தன்று உலக அளவில் பல்வேறு சிறப்பு நூலகங்கள், மற்றும் தகவல் அறிவியல் துறையில் மாறிவரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான மாநாடுகளும், கூட்டங்களும் நடைபெறுகின்றன.

சிறப்பு நூலகர்கள்!

‘சிறப்பு நூலகர்கள்’ என்னும் கூறு, பல்வேறு பெருநிறுவன நூலகங்கள், அரசாங்க நூலகங்கள், அறிவியல் நூலகங்கள், சட்ட நூலகங்கள், மருத்துவ நூலகங்கள் மற்றும் அருங்காட்சியக நூலகங்கள் போன்ற ஏதேனும் ஒரு துறை சார்ந்த நூலகங்களில் சேவையாற்றும் நூலகர்களைக் குறிக்கிறது. இவ்வகை நூலகங்கள் ‘தகவல் வள மையங்கள்’ (Information Resource Centres) எனவும் குறிக்கப் படுகின்றன.


1909-இல் நடந்த ‘வெர்டானா மாநாட்டில்’ ஜான் காட்டன் டானா (John Cotton Dana) என்னும் அமெரிக்க நூலகரும், இன்னும் 26 நூலகர்களும் ஒன்றிணைந்து, சில சிறப்புத் துறைகளில் தனி கவனம் செலுத்தும் வகையில், அவைப் பற்றிய தகவல்கள் அறிந்த நூலகர்கள் அவசியம் வேண்டும் என முடிவு செய்தனர். இந்த மாநாட்டின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே ‘சிறப்பு நூலகர்கள் இயக்கம்’ (Special Libraries Association) ‘சிறப்பு நூலகர்கள்’ (special librarians) மற்றும் ‘சிறப்பு நூலகங்கள்’ (special libraries) என்னும் சொற்பதங்கள் நடைமுறைக்கு வந்தன.

இந்தச் சிறப்பு நூலகர்கள், ஒரு துறை சார்ந்த பொதுவான செய்திகள் மற்றும் நூல்களைத் தவிர்த்து, அத்துறை பற்றிய பரவலான, அதிமுக்கியமான, எளிதில் கிடைக்கமாட்டாத மற்றும் நம்பத்தகுந்த செய்திகள் மற்றும் நூல்களில் கவனம் செலுத்துவர். அல்லது அவர்கள் பணி செய்யும் அமைப்பிற்குத் தொடர்பான செய்திகள் மற்றும் நூல்களில் வித்தகர்களாக இருப்பர்.

(குறிப்புதவி தளம்!)

Apr 7, 2014

மஞ்சள் நதிக்கரை மக்கள்-சீனா! -1

[என்னடா கொஞ்ச நாளா ஆளையே காணோமேனு மக்கள்-லாம் சந்தோஷப்பட்டது காதுல கேட்ருச்சுங்க! அதான் blog பக்கம் கொஞ்சம் எட்டிப் பாத்துட்டு போகலாமேனு....(சரீ...சரீ... புரியுது... மொக்க போடல!...) இப்ப நேரா விஷயத்துக்கு வருவோம். இத்தன நாளும் சீரியஸ் கதை, சாப்பாட்டு கதை, மொக்க கதை எல்லாம் நம்ம blog-ல பாத்துருப்பிங்க (?!?!!.. சும்மா சொல்லிக்க வேண்டியது தான்!) அதனால கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது பதிவ போடணும்-னு முடிவு செஞ்சு மூளைய கசக்கிப் பிழிஞ்சு யோசிச்சிட்டே இருந்தப்ப டி.வி.-யில நம்ம பய டோங்லீ-யும், சூர்யா-வும் சண்ட போட்டுக்கிட்டு இருந்தாங்க. உடனே ஒரு பல்பு எரிஞ்சுதே (அட! என் மூலையில தாங்க!) உடனே அந்த அழகான சீன மனுஷங்களைப் பத்தி ஏன் தெரிஞ்சுக்க கூடாது-னு விக்கிபீடியா-வில் இருந்து விண்வெளி வரையில் அலசி ஆராய்ந்து விஷங்கள சேகரிச்சுட்டோம்-ல! (நாங்கல்லாம் அப்பவே அப்பிடி...) அத அப்படியே உங்களுக்கும் இதோ பதிகிறேன்! அறிவை வளர்த்துக்கோங்க மக்களே!]

“சீனா” –அப்படி-னு சொன்னதுமே நமக்கு அந்த குட்டையான, அழகான, கீழ் இமைகள் மூடாத கண்களை உடைய, தட்டையான சிறிய மூக்கு மனிதர்கள் தாங்க ஞாபகம் வருவாங்க! கொரியா, ஜப்பான், நேபால், அஸ்ஸாம் மாநில மக்களை பார்த்தா கூட இன்னிக்கும் நம்ம கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்கள் ‘சைனாகாரர்கள்’-னு தான் அடையாளம் காட்டுவாங்க. உருவ அமைப்பிலேயே இத்தனை வித்தியாசங்கள் கொண்ட இந்த சீன மக்களின், இவர்களின் தேசத்தின் வரலாறும் கூட ரொம்ப வித்தியாசமானது மட்டுமில்லாமல், மிகப் பெரியதும், புகழ் பெற்றதும், சுவையானதும் கூட!

பண்டைய வரலாறு

சீனா, உலகின் பழமையான நாகரிகங்கள் தோன்றிய நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. சீனாவின் வரலாறு சுமார் பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது. ஆனால், இதில் சீனப் பேரரசாக ஒருங்கிணைக்கப் பட்டதற்கு பின் வந்த ஐயாயிரம் ஆண்டுகளையே வரலாற்றிஞர்கள் கணக்கில் கொள்கிறார்கள்.


சீன இதிகாசங்களின்படி, சீன மக்கள் அனைவரும் மனித குலத்தின் உண்மையான முன்னோர் எனக் குறிக்கப்படும் பேரன்னை Nv Wa என்பவரால் படைக்கப்பட்டவர்கள் என நம்புகிறார்கள். Pan Gu என்னும் கடவுள் சுவர்க்கத்தையும் பூமியையும் பிரித்ததாகவும், அதனால் அவர் தனியனாக விடப்பட்டு இறந்ததாகவும், அவரின் உடலே புதிய ஓர் உலகமாக உருவானது என்றொரு சீன புராணக் கதையுண்டு. இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, பேரன்னை Nv Wa உலகில் தோன்றி, மஞ்சள் நிறமான வண்டல் மண்ணைக் கொண்டு தன்னைப் போலவே ‘மண் பொம்மை’களைச் செய்து, அவற்றை நிலத்தின் மீது வைக்க, அவை உயிர்பெற்று மனிதர்களாகி உலகம் முழுவதும் பரவினர் என்று இவர்களின் பண்டைய புராணங்கள் கூறுகின்றன.

சீன நாகரிகம் ஹுவாங் டி மற்றும் யான் டி என்னும் சமயம் சார்ந்த பேரரசர்களால், மஞ்சள் நதிக்கரையில் தோற்றுவிக்கப் பட்டது என சீன வரலாறு கூறுகிறது. பல ஆண்டுகளுக்குப் பின், இந்த இரு பேரரசுகளும் ஜியா பேரரசின் காலத்தில் ஒன்றிணைக்கப்பட்டன. இதன்படி சீன மக்கள் தங்களை யான், ஹுவாங் –இந்த இருவரின் வம்சாவழியினராகவே கருதி, ஹுவா மக்கள் அல்லது ஜியா மக்கள் எனக் குறிக்கின்றனர். இம்மக்களே பிற்காலத்தில், பூமியின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் மஞ்சள் நதிப் படுகையில் ஒரு நகரத்தை நிறுவினர்.

சீனப் பேரரசுகள்!

ஜியா பேரரசின் காலத்தில் இருந்து தான் சீன வரலாறு தொடங்குவதாகக் கருதப்படுகிறது. அதாவது கி.மு. 21-ஆம் நூற்றாண்டில்! ஜியா ஆட்சியைத் தொடர்ந்து ஷாங் பேரரசு, சௌ பேரரசு, ஃவின் பேரரசு, ஹான் பேரரசு, முப்பெரும் இராஜ்ஜியங்கள், சூ(ய்) பேரரசு, ஸாங் பேரரசு, யுஆன் பேரரசு, மிங் பேரரசு, ஃக்யிங் பேரரசு போன்ற பேரரசுகள் சீனா-வை ஆண்டு வந்தன. இறுதியாக சொன்ன ஃக்யிங் பேரரசின் ஆட்சிக்காலத்தில் தான் புகழ்ப்பெற்ற 'முதல் அபின் போர்' (The Opium Wars) நடக்கிறது.

அதாவது, 1839-இல் பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த இந்தியாவில் இருந்து பிரித்தானிய அரசு அபின் கடத்தி, சீனாவிற்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது ஃக்யிங் பேரரசாங்கம் அவர்களின் போதைப் பொருள்களுக்கு எதிரான சட்டங்களை செயல்படுத்தி, பிரித்தானியர்களின் முயற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் பிரித்தானியர்களின் அபின் வர்த்தகத்தை ஒழித்துவிட எண்ணிய ஃக்யிங் பேரரசின் ஆளுநர், 1,700 அபின் வர்த்தகர்களை கைது செய்து, சுமார் 2.6 மில்லியன் பவுண்டு அபினை நீர், உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றில் கலந்து கடலில் கொட்டியும், எரித்தும் அழித்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, கோபமுற்ற பிரித்தானிய அரசு, 1840-ல் ஹாங்-காங் –ஐ கைப்பற்றி, பின் மிகப் பெரும் படையை அனுப்பி கான்டான் நகரின் மீது போர் தொடுக்கிறது. அப்போது திங்காய், ஜென்ஹாய், நிங்போ, ஷாங்காய் ஆகிய நகரங்களை ஆக்கிரமிப்பு செய்து அங்கிருந்து யாங்ட்ஸ் நதி வழியாக 1842-இல் ஜியாங்நிங் (நான்ஜிங்) நகரை அடைகிறது. ஃக்யிங் பேரரசின் சமாதான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இந்தப் போர் 'நான்ஜிங் ஒப்பந்தம்' செய்யப்பட்டு முடிவுக்கு வருகிறது. இதன்மூலம் மீண்டும் பிரித்தானிய அரசு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அபின் வர்த்தகத்தை முறையாக 5 துறைமுகங்களின் வழியாகத் தொடர்ந்தது. இது தான் முதலாம் அபின் போர்! (?!?!?!... அப்படினா இரண்டாவது போர் வேற இருக்கா-னு கேக்கறிங்களா? ஆமாம்! அப்போ அபின் உற்பத்தி அமோகமா இருந்துருக்கு நம்ம நாட்டுல!)

இரண்டாம் அபின் போர் 1856-இல் தொடங்கி 1860-இல் முடிந்தது. இந்த இரண்டு அபின் போர்களும் சீன தேசத்துக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்து, சீனாவை அரை காலனித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ நாடாக மாற்றம் பெறச் செய்தது.

ஒருவழியாக அபின் யுத்தங்கள் எல்லாம் முடிந்து கொஞ்ச காலம் சீனா-வில் அமைதியான முறையில் ஆட்சி நடந்து கொண்டிருந்தாலும், சீன மக்களால் ஃக்யிங் பேரரசு விதித்த கடுமையான சட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே 1912-இல் மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கிறது.

ஃக்யிங் பேரரசை ஆட்சியிலிருந்து விளக்க, டாக்டர்.சூன் யாட்-சென் என்பவரின் தலைமையில், “தேசியவாதம், ஜனநாயகம், மக்களின் வாழ்வாதாரம்” என்னும் மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சீனப் புரட்சி தொடங்கியது. இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக சீனா-வில் இருந்து வந்த ‘முடியாட்சி’ முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது. (இருங்க, இன்னும் முடியல!!!)

இதற்கு பின், 1919-இல் மே-4 இயக்கம், (May 4th Movement) ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக கிளர்ந்தெழுகிறது. இது 1921-இல் சீனாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தோற்றுவித்து, சமூகத்தில் மாபெரும் மாற்றத்தை விளைவிக்கிறது. இச்சமயத்தில் சீனாவைத் தாக்கிய ஜப்பானிய வீரர்களை எதிர்த்து சீனர்கள் புதிய வேகத்துடன் செயல்படுகிறார்கள். இந்த ஜப்பானுக்கு எதிரான போர் கம்யூனிச சீனா-வின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைகிறது.

1949-இல் தான் சீனா-வை குடியாட்சி (மக்களாட்சி) நாடாகவும், பீஜிங் நகரை சீனா-வின் புதிய தலைநகரமாகவும் அதிகாரப்பூர்வமாக சேர்மன் மாவோ ஜெடாங் (Chairman Mao Zedong) அறிவித்து வழி நடத்திச் சென்றார்.

ஒருவழியாக சீனா-வை பற்றிய முக்கியமான செய்திகளை சொல்லியாச்சு. இனி அடுத்த பதிவுல இன்னும் சுவாரசியமான சீனா-வின் மக்கள், மொழி, பண்பாடு, வாழ்க்கை முறை, முக்கியமாக ‘உணவு’ இந்த மாதிரி விஷயங்களைப் பார்ப்போம்!