Feb 9, 2019

உப்பு, புளி, மிளகாய்! - 'சாக்லெட்’

உப்பு புளி மிளகாய் வரிசையில் இந்த முறை நாம பார்க்கப் போறது சின்ன குழந்தைகள்-ல இருந்து பெரியவங்க வரை எல்லாருக்கும் பிடித்த ‘சாக்லெட்’ பற்றி!

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய மத்திய அமெரிக்க மழைக் காடுகள் பற்றிய குறிப்புகளில் சாக்லெட்-டின் பயன்பாடு குறித்து சொல்லப்பட்டிருகிறது. உயர் வெப்பநிலையும், அதிக மழைப் பொழிவும் கொண்ட இந்த வெப்பநிலைக் காடுகளே கோகோ மரங்கள் சாகுபடிக்கு ஏதுவான இடமாக அமைந்தது. இந்த கோகோ மரங்களிலிருந்தே சாக்லெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.


மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்த மாயன் நாகரிக மக்கள் கோகோ மரங்களை புனிதத் தன்மை கொண்டவையாக வழிபட்டு வந்துள்ளனர். கோகோ என்பது மாயன் மொழியில் ‘கடவுளின் உணவு’ எனப் பொருள் கொண்டு வந்தது. பின்னர் ஏற்பட்ட லத்தீன் மொழியில், ‘தேவர்கள் உண்ணக்கூடிய உணவு’ எனப் பொருள்படும் Theobrama Cacao என்று இவை வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஐரோப்பியர்கள், இவற்றை சுருக்கி ‘கோகோ’ என்று வழங்கினர்.

மாயர்கள் கோகோ மரங்களிலிருந்து பெறப்படும் கோகோ விதையை (cocoa beans) வறுத்து, சோளம் மற்றும் மிளகாய் வகையை கலந்த காரமாகவும் கசப்பும் இனிப்பும் கலந்ததுமான பானமாகக் காய்ச்சிப் பருகி வந்தனர். மேலும் இந்த கோகோ கஞ்சி பானமானது, விழாக் கொண்டாட்டங்களின் போதும், செல்வந்தர்கள் மற்றும் மதகுருமார்கள் போன்றோருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது.


1615- இல் பிரெஞ்சு நாட்டில் நடந்த ஒரு அரச திருமண வரவேற்பில் இது போன்ற ஒரு பானம் வழங்கப்பட்டது. பின்னர் 1662-களில் இங்கிலாந்து இதனை “சாக்லேட்” எனும் பெயருடன் (Chocolate) வரவேற்றது. மேலும் 1847-இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ப்ரை & சகோதரர்கள்’ உலகின் முதல் திட சாக்லேட்-ஐ அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அதன் கசப்புச் சுவையால் மக்களிடம் அது பெருத்த வரவேற்பு பெறாமல் போனது. அதன் பின்பு, மீண்டும் 1874-இல் புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து சாக்லேட் வல்லுனரான டானியல் பீட்டர் என்பவர் சாக்லேட்டின் கசப்புச் சுவையை மட்டுப்படுத்த எண்ணி அதனுடன் பல்வேறு பொருட்களைச் சேர்த்து ஆராயத் தலைப்பட்டார். முடிவில் சாக்லேடுடன் பால் கலந்து செய்த அவரின் முயற்சி பெரும் வெற்றி கண்டது. மக்களும் அதனை மிகவும் விரும்பி ஏற்றுக்கொண்டனர்.


இந்த சாக்லேட் உலகம் முழுதும் பிரபலமடைந்ததும், டானியல் பீட்டர் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு உணவு வல்லுனர்களும் புதிய புதியச் சுவைகளில் சாக்லேட்டுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். அதில் சில வகை சாக்லெட்டுகளான Milk Chocolate, Bitter Chocolate,  White Chocolate   போன்றவை மிகப் பிரபலமடைந்தன.

இதுவே நாம் அவ்வப்போது விரும்பி உண்ணும் சுவையான சாக்லெட்டுகளின் வரலாறு.

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம்!

சத்தம் போடாதே!...

ற்று முன்... வீட்டிற்கு அருகாமையில்...

எங்களது அப்பார்ட்மெண்ட்-க்கு பக்கவாட்டில் ஒரு குறுகிய சந்து. பின்புறத்தில் அடர்ந்த புதர் மண்டிய பெரிய திறந்தவெளி. இந்த இரு இடங்களுமே பல வகையிலும் சமூக சீர்கேடுகள் நடந்தேற அவ்வபோது தோதான இடங்களாக அமைந்துவிட்டன. இன்றும் அப்படித்தான்.

அறையில் லேப்டாப்-இல் மதுஒழிப்புப் போராட்டங்கள் பற்றிய செய்தி வாசித்துக் கொண்டிருந்தேன். பல்வேறு தரப்பினரும் அவரவர் கருத்துக்களை சொல்லியிருந்தனர். வீட்டிலிருந்த எல்லாரும் மொட்டைமாடியிலியிருந்தனர். திடீரென வெளியே பெருங்குரல்கள். பக்கவாட்டுத் தெருவில் இருந்து குரல்கள் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டேயிருந்தன. பரப்பரப்புத் தொற்றிக்கொள்ள வீட்டிலிருந்து மொட்டைமாடிக்கு ஓடினேன். எதிர்பார்த்தது போலவே எல்லாரும் அங்கிருந்து தெருவை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

கீழே தெருவில் இரு தரப்பினருக்கு பலமான சண்டை நடந்துகொண்டிருந்தது. குறுகிய தெருவில் எதிரெதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் இடித்துக்கொள்ள சண்டை தொடங்கியிருக்கிறது. ஒரு தரப்பிலிருந்த இரண்டு பேர் நல்ல நடுத்தர வயதினராகவும், தெளிவாகவும் இருந்தார்கள். மற்ற தரப்பில் இரண்டு இளைஞர்கள்....முழுக்கக் குடித்திருந்தார்கள்.

மது அருந்திய இளைஞர்கள் போதையில் எதிராளிகளை கண்மண் தெரியாமல் வசைமாரி பொழிந்தனர். எதிரணி கொஞ்சம் டீசன்ட்டாக அவர்களை திரும்பப் போகச் சொல்லிவிட்டு இவர்களும் வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பினர். தெரு திருப்பம் வரை சென்றவர்களை இந்த இளைஞர்கள் தொடர்ந்து சென்று சண்டைக்கு மீண்டும்மீண்டும் அழைக்க நடுத்தர வயதினருக்கு கோபம் ஏறிக்கொண்டே போனது.

இளைஞர்களில் ஒருவன் மற்றவனைத் தூண்டிவிட, இன்னொருவன் கையில் பெரிய ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டு சண்டைக்குத் தயாரானான். இவர்கள் விடாமல் மற்ற இருவரையும் சண்டைக்கு அழைக்கவே அவர்களும் கையில் கல் வைத்திருந்த இளைஞனை நோக்கி அடிக்க ஓடி வந்தனர். உடனே சண்டையை தூண்டி விட்டவன் வேகமாக ஓடி ஒரு புதருக்குள் பதுங்கிக் கொண்டான். கல் வைத்திருந்தவன் நடுத்தர வயதுடையவரை முகத்தில் வேகமாக தாக்க அவரது இடது முகம் முழுக்கக் காயமாகி ரத்தம் கொட்டத் தொடங்கியது. கோபமான இருவரும் குடித்திருந்த இளைஞனை பலமாகத் தாக்கத் தொடங்கினர்...

அவர்களே போலிசுக்கு போன் செய்து அவனை இழுத்துக் கொண்டு செல்ல யத்தனித்தபோது...இன்னும் சிலர் சேர்ந்து அவனை அடிக்கவும் அவன் தன்னிலையிழந்து தரையில் விழுந்தான். இன்னமும் இன்னொரு இளைஞன் புதருக்குள் பதுங்கியிருக்கிறான்.

அவனை இழுத்து சென்றபின்... சலனங்கள் கொஞ்சம் அடங்கியதும்.... எதிர்பார்த்தவாறே அந்த இளைஞன் தப்பிக்க நினைத்துப் புதருக்குள்ளிருந்து எங்கள் குடியிருப்பின் காம்பவுண்ட் நோக்கி வந்து உள்ளே தாண்டி குதிக்க முயன்றான். இதைப் பார்த்துகொண்டிருந்த எங்கள் குடியிருப்புவாசிகள் பெருங்குரலெடுத்து அவனை நோக்கிச் சென்று அவனை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.

பாவம்! முழுக்கக் குடித்திருந்த அந்த இளைஞன் மிரண்டு விட்டான். புதர் மண்டிய மைதானத்தைத் தாண்டி வெளியே போனால் போலீசிடம் சிக்கிக் கொள்வோமென பயந்து மீண்டும் ஒரு புதருக்குள் பதுங்கிக் கொண்டான். இதற்குள் அப்பார்ட்மெண்ட்-வாசிகளும் போலீசுக்கு தெரிவிக்க...அரைமணி சென்றபின் நிதானமாக காவலர்கள் வந்தனர்.

எங்கள் அனைவருடைய கண்களும் அவன் மறைந்திருந்த அந்த புதரை நோக்கியே இருந்தன. புதர் அமைதியாகத்தான் இருந்தது. போலீஸ்காரர்கள் இருட்டில் புதருக்கருகில் தயங்கித் தயங்கி சென்று அந்தப் புதரைத் தவிர்த்து மற்றப் புதர்களுக்குள் எல்லாம் தேடிவிட்டு  இங்கே யாரும் இல்லை என சொல்லிவிட்டுச் சென்றார்கள். பார்த்துக் கொண்டிருந்த மக்களின் குரல்களை அவர்கள் ஒரு பொருட்டாக ஏற்கவில்லை.

அந்த இளைஞன் இன்னமும் அந்தப் புதருக்குள் பத்திரமாக மது போதையில் உறங்கிக் கொண்டுதானிருக்கிறான்.