Mar 23, 2014

இலக்கியக் கரடிகள்!?!

முதலில் இந்த தலைப்பில் எழுதுவதைப் பற்றி யோசித்தபோது நான் எனக்கு சிரிப்பாக இருந்தது. இருப்பினும் என்னுடைய பால்யகால சகாக்களான Paddington மற்றும் Winnie-the-Pooh இவர்களைப் பற்றி எழுதுவது எனக்கு மகிழ்ச்சியளித்தது.

குழந்தைகள் இலக்கியத்தில் சிறந்த மற்றும் எல்லாருக்கும் பிடித்தமான ஒரு கற்பனை பாத்திரப்படைப்பு கரடி உருவமுடைய கற்பனைப் பாத்திரங்களே என்று சில இணைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன! ஏன் நாம் இந்தக் கரடி குட்டிகளின் மேல் இவ்வளவு பிரியம் காட்டுகிறோம் என்பது தெரியவில்லை,... ஆனால் அவை நாம் நேசிக்கும்படியாகத் தான் எப்போதும் இருக்கின்றன! சந்தைகளில் பரவலாக விற்கப்படும் ‘டெட்டி பேர்’ (Teddy Bear) எனப்படும்  கரடி பொம்மைகளின் தாக்கமாக இருக்கலாம்; அல்லது இந்த கரடி கதாபாத்திரங்கள் நம்மைப் போல இரண்டு கால்களில் நிற்பதனால் நம்மைக் கவர்ந்திருக்கலாம்; அல்லது அவை தேனைத் தேடி எடுக்கவும், ‘மர்மலாட்’-ஐ சுவைக்கவும் செய்யும் சூட்டிகையான செயல்களால் நாம் கவரப்பட்டிருக்கலாம்! அது எவ்வாறாயினும், இந்தக் கரடி பாத்திரப் படைப்புகள் குழந்தைப் பருவம் முதலே நம்முடைய வாழ்வியலில் ஓர் இடத்தைப் பிடித்துவிட்டன.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செல்டிக் மற்றும் வட ஐரோப்பிய கதைகள், மற்றும் அமெரிக்க பூர்வீகக் கதைகளில் இந்தக் கரடிகள் முக்கிய பாத்திரங்களாக இடம்பெற்றன. பின் ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளில் இக்கரடி கதாபாத்திரங்கள் இப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப் பட்டன. மேலும், கிரேக்கக் கதை சொல்லியான ஈசாப் தனது நீதிக்கதைகளில் கரடிகளை வளைய வரவிட்டார். ஆனால், இதற்குப் பின் வெளிவந்த குழந்தை இலக்கியங்களில் எல்லாம் கரடிகள், மற்ற விலங்குகளான நாய், பூனை, நரி, குதிரை போலல்லாமல், கதையின் முக்கிய பாத்திரங்களாகவே காட்சிப் படுத்தப்பட்டன.

19-ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில், சர் சார்லஸ் G.D.ராபர்ட்ஸ் வடக்கு கனாடா காட்டுப்பகுதியில் வசிக்கும் காட்டு விலங்குகளை மையப்படுத்தி தான் எழுதிய விலங்குக் கதையில், கரடிகளை தத்ரூபமாக சித்தரித்திருந்தார். அதே நேரத்தில் ரட்யாட் கிப்ளிங், அவரது பேசும் விலங்கான, இந்தியக் காடுகளில் வாழும் “பாலூ” [Baloo] கரடியை ‘மவ்க்லீ’ பையனுடன் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 
இதன் பின்னர், இருபதாம் நூற்றாண்டுகளில், கரடிகள் காடுகளில் வாழும் பாத்திரங்களாக, அல்லது ‘டெட்டி’ எனப்படும் பொம்மைக் கரடிகளாக மட்டும் இல்லாமல், நகரங்களில் வாழும் நாகரிகக் கரடிகளாக நம்முடைய குழந்தைகள் இலக்கியங்களில் வெளிவரலாயின. இக்காலகட்டத்தில் தான், உலகப் புகழ் பெற்ற பாடிங்டன் கரடி [Paddington Bear], வின்னீ கரடி [Winnie-the-Pooh Bear], காடுராய் கரடி [Corduroy Bear], அட்டோ கரடி [Otto-the Book Bear], யோகி கரடி [Yogi Bear], டப்பி கரடி [Tubby Bear], ரூபர்ட் கரடி [Rupert Bear], பூ-பூ கரடி [Boo-Boo Bear], லிட்டில் ஜான் கரடி [Little John],கோ-டா மற்றும் கேனாய் கரடி [Ko-da&Kenai] போன்ற கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டு மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டன. உண்மையில் அவை ஒரு புதிய இலக்கிய ரசனையை குழந்தைகளிடத்தே உருவாக்கி, அவர்களுடைய அன்பிற்குரிய கதைப்பாத்திரங்களாகின.

பின்னாட்களில் குழந்தைகள் இலக்கியத்தில், இந்த கரடிகள் அவைகளுடைய விலங்குத் தன்மையையும் மீறி, குழந்தைகள் அவற்றை எளிதில் தொடர்பு கொள்ள ஏதுவாக, உண்மையான மனிதர்களைப் போன்றே செயல்பாடுகளைக் கொண்ட கதாபாத்திரங்களாக, அற்புதமான கதைப் பின்னணியில் காட்சிப்படுத்தப்பட்டன.

இப்படியாக, கரடிகள் நம் குழந்தைப் பருவத்தினுள் நுழைந்து, வெவ்வேறு பெயர்கள் கொண்டு, நாம் வளர வளர, நம்முடனே அவையும் வளர்ந்து வருகின்றன. ஒவ்வொரு குழந்தையும் நம்மைப் போலவே கரடி கதைகள் கேட்டும், படித்தும், அவைகளுடன் விளையாடியும் முடித்து, மீண்டும் அவற்றை அடுத்த புதிய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கிறார்கள். உலகம் முழுவதிலும் இப்போதும் கூட பெரியவர்களானாலும், சிறியவர்களானாலும் அவர்களுடைய குழந்தை இலக்கிய கதாபாத்திரத்திரத்தில் சிறந்ததாக இக்கரடிகளைத் தான் பெருமளவில் கூறுவார்கள்.
ஒரு காட்டு விலங்கு, தன் மரபுகளைக் கடந்து, மனிதர்களாகிய நமது வாழ்வெல்லைக்குள் நுழைந்து, நம்மை சிரிக்க வைக்கவும், நம்முடன் பேசவும், நம்முடன் நண்பர்களாக இருக்கவும் தலைப்படுவது என்பது விசித்திரமான நிகழ்வு தான்! கற்பனையானாலும் சுவாரசியமாக இருக்கிறது! இன்னமும் என்னுடைய Paddington Bear–ம், Winnie-the-Pooh Bear-ம் குழந்தைக் காலம்தொட்டே என்னுடன் இருப்பதை   எண்ணி நான் மகிழ்கிறேன்!

இனி வரும் காலங்களிலும், நம்முள்ளிருக்கும் குழந்தைமையை காத்துக்கொள்ள இந்தக் இலக்கியக் கரடிகள் நமக்கு துணைபுரியும்!

0 comments: