Apr 18, 2025
அக்கா...அக்கா... வீட்ல யாராது இருக்கியளா?,...
“யாரது?”
நாந்தேன் மேனகா வந்துருக்கேன் கா...
“வாம்மா உள்ள...என்ன வேணும்?”
அக்கா,...அந்தாளு ஊருக்குப் போய் இத்தோட ரெண்டு வாரம் ஆவுது க்கா... ஊட்ல பொங்க
சோறுக்கு அரிசி கூட இல்ல... அதான் உங்க கிட்ட கொஞ்சம் சோறு வங்கியாறலாம்-னு
வந்தேனுங்க க்கா...- உதட்டைச் சுழித்து
சுழித்துப் பேசினாள்.
“இதப் பாரு மேனகா... இப்டியே தெனமும் ஒவ்வொரு
வூட்லயும் போய் சோத்துக்கு நிக்கப் போறியா? அப்டி என்னதான் பண்ணுவானோ உன் ஊட்டுக்காரன்
ஊருல! போன் எதுவும் பேசினானா?”
எங்க க்கா!... மீண்டும் உதட்டைச் சுழித்தாள்.
அந்தாளு போன தெச தெரியல. அந்தாளோட மொத தாரம் அவன மந்தரம் போட்டு கட்டி வெச்சுட்டா-னு
சொல்றாங்க ஊர்காரங்க. எனக்கென்ன பண்றதுனே தெரில க்கா- உதடு கொஞ்சம் அதிகமாகவே சுழன்றது!
ஆம்! இந்த மேனகையின் கணவர் எனச்
சொல்லப்படுபவர் இன்னொருவளின் கணவர். மேனகை கட்டுமான தொழில் செய்துவரும் சங்கரன்
மேஸ்திரியின் கீழ் சித்தாளாக வேலை பார்த்து வந்து வந்தாள். அவளது கணவனாக
சொல்லப்படும் கோபாலு அதே மேஸ்திரியிடம் பெரியாள் வேலை செய்து வந்தான். மேனகையின்
உதட்டுச் சுழிப்பில் கிறங்கி இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஊரை விட்டு ஓடி வந்து
விட்டனர். இந்த கோபாலு கொஞ்சமாக தண்ணி அடித்தால் கூட தன் சம்சாரம் நினைவு வந்து
ஊருக்கு ஓடி விடுவான். பின் மேனகையின் நினைவு வந்ததும் இங்கு ஓடி வந்து விடுவான்.
இந்த முறை ஊருக்குச் சென்றவனை குல தெய்வத்துக்கு கட்டிப் போட்டு அங்கேயே வைத்து விட்டனர். இதனால் மேனகைக்கு ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. இப்போது வேலை செய்யும் பெரியாள் சந்துரு-விடம் உதட்டைச் சுழித்துச் சுழித்துப் பார்த்தும் பேசியும் கொண்டுதானிருந்தாள். இருந்தாலும் மழைக்காலம் ஆதலால் கால் வயிறு அரை வயிறு கஞ்சி தான்.
“இத பாரு மேனகா... நீ இப்படி கோபாலு கூடவும்
சந்துரு கூடவும் நெருங்கிப் பழகுறது இங்க தெருவுல யாருக்கும் சரியா படல. நீ இப்போ
வேல பாக்குற மேஸ்திரி ரங்கனுக்கு இதெல்லாம் புடிக்காது. நானே சொல்லக் கூடாது... எனக்கு
நீ செய்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல. பொம்பள-னா எப்படி வேணா இருக்கலாம்-னு சொல்ற
மாதிரி இருக்கு நீ பண்றது. இத கோபாலு-வோட நிறுத்திக்கோ நீ. சந்துருவை விட்டுரு.
என்ன க்கா நீங்களே இப்படி சொல்லிட்டிங்களே...
ரங்கன் மேஸ்திரி ரொம்ப நல்லவருக்கா... சரி சரி... இப்டியே பேசிகிட்டே நிக்காத...
சோறு பொங்கினதும் நானே குடுத்தனுப்பறேன்,...”
அடுத்தநாள் காலை...
“ஐயோ...போய்ட்டானே போய்ட்டானே... நேத்து
வரைக்கும் என் கூட ஒன்னும் மண்ணுமா இருந்த என்கூட்டுக்காரன் என்ன விட்டுட்டு அந்த
மேனகா கூட ஓடிப் போய்ட்டானே....”
மேஸ்திரி ரங்கனின் மனைவி தெருவில் கூவி கூவி
ஊரைக் கூட்டி அழுது கொண்டிருந்தாள்.... மேனகை கூட்டு ரோட்டுக்கு போகும் பஸ்ஸில்
மேஸ்திரி ரங்கனோடு எந்த களங்கமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தாள்.
0 comments:
Post a Comment