Oct 18, 2025

நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்!...

             ஒவ்வொரு மொழியின் வளர்ச்சியிலும், காலத்துக்குக் காலம், அம்மொழியின் இலக்கியம் புதுப்புது வடிவம் பெறுவது சரித்திரத்தில் நாம் காணும் உண்மை. ஒரு மொழியின் பழமை, அம்மொழி பேசுபவர்களின் சமூக அமைப்பு, மற்றைய இனத்தவர்களுடன் கொள்ளும் தொடர்பு, வேற்று மொழிகளின் பாதிப்பு – இத்தகைய காரணங்களால் இலக்கியம் புதுப்புது வடிவங்களைப் பெறலாம்.

 

இத்தகைய புதிய வடிவங்களையும், வகைகளையும் பார்த்தால், காலத்துக்குக் காலம் நமது தமிழ் இலக்கியம் பற்பல துறைகளை வளர்த்துக் கொண்டதைக் காணலாம்.

 

சமணர், பௌத்தர் வருகையாலும், வடமொழிப் புராணங்கள், இதிகாசங்களின் செரிவாலும், தத்துவக் கருத்துகள், இசையுணர்வு முதலியவற்றின் உந்துதலாலும், தமிழ் இலக்கியம் புதுப்புது துறைகளையும் அவற்றிற்குப் பிரத்தியேகமான வடிவங்களையும் வளர்த்துக் கொண்டது. அவ்வழியில் தமிழ் இலக்கியத்துக்குப் புதிதாக வந்து சேர்ந்தது ‘நாவல் என்ற துறை.

 

ஆங்கிலப் பள்ளிக்கூடங்களும், பல்கலைக் கழகங்களும் ஆங்கில மொழி இலக்கியங்களைப் போதித்த நாட்களில், ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள் கட்டாயமாக “ஆங்கில நாவல்”களையும் கற்க வேண்டியிருந்தது.

 

ஆங்கில நாவல் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே தோன்றி வளர்ந்து, பெருமளவில் இலக்கிய அந்தஸ்தைப் பெற்று, நூறு ஆண்டுகள் கழித்த பின்னரே நம் நாட்டவர் அவற்றைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்து.

 

ஆரம்ப கால நாவலாசிரியர்கள் ஆங்கிலப் படைப்புகளை மாதிரியாகக் கொண்டு தமிழில் புதுமையாகப் படித்தபோது, மேனாட்டு மரபுகளின் பாதிப்பால் தமிழர் பண்பாடு மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்பட்டது, அவர்களின் கதையின் பொருளிலும், போக்கிலும் காணக்கூடியதாய் இருந்தது.

 

ஆங்கிலம் மட்டுமின்றி மற்றும் மேல்நாட்டு நாவல்கள் பலவற்றின் தாக்கம் ஏற்பட்டபோது புலனாகிய இலக்கிய உணர்வு, தமிழ் நாவலாசிரியர்கள் மேலும் வளர்ச்சி பெற நேரடியாக உதவிற்று.

 

இந்திய மொழிகளில் முதன் முதலாக எழுதப்பட்டு வெளிவந்த நாவல் வங்காளத்தில், பங்கிம் சந்திரர் எழுதிய 'துர்க்கேச நந்தினி' என்று சொல்லப்படுகின்றது. இது வெளிவந்தது 1865-ல்.

 

இதன் பின்னர் இரண்டாவதாக வெளிவந்த நாவல் தமிழ் மொழிக்கிப் பெருமை தேடித்தந்த 'பிரதாப முதலியார் சரித்திரம்'. மாயூரம் வேதநாயகம்பிள்ளை இதை எழுதிப் பிரசுரித்தது 1879-ம் ஆண்டில்.

 

தமிழ் நாவலுக்கு அடுத்ததாக 1880-ல் வெளிவந்தது தெலுங்கு நாவல், 'ராஜகேர சரித்திரமு'. இதன் ஆசிரியர் ராஜாமகேந்திரம் அரசினர் கல்லூரியில் தெலுங்குப் பண்டிதராயிருந்த வீரேசலிங்கம் பந்துலு.

 

இதையடுத்து 1887-ல் தான் மலையாள நாவல் 'குண்டலதா' என்ற பெயரில் அப்புநெடுங்காடி என்பவரால் எழுதப்பட்டு வெளிவந்தது. வேதநாயகம் பிள்ளையின் 'சுகுண சுந்தரி' என்ற இரண்டாவது நாவலும் இதே ஆண்டில் தான் வெளிவந்திருக்கிறது.

 

பின்னர், 1890-ம் ஆண்டிலே 'ஊசோன் பாலந்தை கதை' என்ற நாவல் ஈழநாட்டில் வெளியிடப்பட்டது. இது இலங்கையின் இன்னாசித்தம்பி என்பவரால், போர்த்துக்கல் மொழிக் கதையொன்றைத் தழுவி எழுதப்பட்டது.

 

இதற்கு முன்னரே 1885-ல் மற்றொரு நாவல் 'அஸன் பே சரித்திரம்' என்ற பெயரில் ஈழநாட்டில் வெளிவந்திருக்கிறது. இதனை எழுதியவர் ‘சித்திலெவ்வை என்ற ஆசிரியர்.

 

    இவைகளைத் தவிர, 1856-ம் ஆண்டிலே 'காவலப்பன் கதை' என்ற நாவல் யாழ்ப்பானத்தில் வெளியிடப்பட்டதாகவும் ஒரு செய்தியுண்டு.

 

நாவலாசிரியரின் கற்பனாசக்திக்கும், கருத்தாழத்துக்கும், சமுதாய நோக்கிற்கும், உணர்ச்சி வெளியீட்டுக்கும், கலை நுகர்ச்சித் திறனுக்கும், பார்த்து, கிரகித்து, எடுத்துச் சொல்லும் திறமைக்கும் ஏற்றவாறு சில பிரபல படைப்பாளிகள் தமக்கெனத் தனி நடையும் வகுத்துக் கொண்டார்கள். இன்றைய சிறந்த நாவலாசிரியர்களில் சிலருடைய நடையைப் படிக்கும்போது இன்னார்தான் எழுதியிருக்க முடியும் என்று நிர்ணயிப்பதற்கான அடையாளங்களைக் கண்டு கொள்ளலாம். இவ்வகையில் வாசகர்கள் இனம் கண்டு கொள்ளும் நடையில் நாவல்கள் எழுதும் ஆசிரியர்கள் சிலரின் நடைகளுக்கு உதாரணங்கள் சிலவற்றைக் காணலாம்.

 

மாயூரம் வேதநாயகம்பிள்ளை:

மாயூரம் வேதநாயகம்பிள்ளை ஆங்கில இலக்கியங்களைப் படித்து நீதிபதியாகத் தொண்டாற்றியவர். அத்துடன் நிரம்பிய தமிழிலக்கியப் பயிற்சியும் பெற்றவர். இவரது முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம் என்பது கதைத்தலைவரான பிரதாப முதலியாரே தன் கதையைக் கூறும் பாணியில் அமைத்துள்ளார். இந்நாவல் தெவிட்டாத நடையும், குறையாத சுவையும் கொண்டதாக அமைந்தது. இந்நாவலே தமிழில் தோன்றிய முதல் நாவலாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வேதநாயகம் பிள்ளை அவர்கள் ‘சுகுண சுந்தரி என்னும் மற்றொரு நாவலையும் எழுதினார். 

 

ராஜம் ஐயர்:

நாவல் வரலாற்று ரீதியில் ‘பிரதாப முதலியார் சரித்திரம் தான் முதன் நாவல் என்று பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும், நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் திறனாய்வு அடிப்படையில் முதலிடத்தைப் பெற வேண்டியது ராஜம் ஐயரின் ‘கமலாம்பாள் சரித்திரம் என்பது இலக்கிய ஆராய்ச்சியாளர்களின் முடிவு. தமிழ் நாவல் இலக்கியத்திலே ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ராஜம் ஐயர். ராஜம் ஐயர் தமது இருபத்தியோராவது வயதிலேயே நாவல் எழுதத் தொடங்கினார். சாதாரணமாக உலகானுபவம் நிரம்பப்பெற்று, நிரந்தர இலக்கியத்தை தன்மை பெரும் நாவலை எழுதுவதற்கு, குறைந்தது நாற்பது வயதாவது செல்ல வேண்டுமென்பது அறிஞர் சிலரது கருத்து. ஆகையால் இளம் வயதில் நாவல் எழுதிய ராஜம் ஐயர் மேதைகள் வரிசையில் வைக்கப்படவேண்டியவர்.

 

மாதவய்யர்:

‘பத்மாவதி சரித்திரம் என்னும் நாவலையே முதன்முதலாக மாதவய்யர் படைத்தார். கதைக்கருவிலும், அமைப்பிலும் மிகுந்த திருத்தங்களைச் செய்த முதல் நாவலாசிரியர் இவரே. இவரது பிற நாவல்கள் விஜயமார்த்தாண்டம், முத்துமீனாட்சி, தில்லை கோவிந்தன், சாவித்திரி சரித்திரம் போன்றவைகளாகும். மாதவய்யர் ஆங்கிலத்தில் நாவல் படைக்கும் திறன் நிரம்பப் பெற்றவராவார். 

 

க.ம.நடேச சாஸ்திரி:


ராஜம் அய்யர், மாதவய்யர் ஆகியோரின் சமகாலத்தவரான இவர் தமிழ் நாவல் முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஓர் ஆசிரியர். ஆங்கிலத்திலும், தமிழிலும் கதை இலக்கியத்துக்குப் பெருமை தேடித்தந்தவர். 1900-ல் தமது முதல் நாவலான ‘தீனதயாளு படைத்தார். 1894-ஆண்டிலேயே நடேச சாஸ்திரி ‘தானவன் என்ற துப்பறியும் நாவல் ஒன்று எழுதி வெளியிட்டார். 1900-க்கும் 1906-க்குமிடையில் நடேச சாஸ்திரி கோமளம் குமரியனது, திக்கற்ற இரு குழந்தைகள், மாமி கொலுவிருக்கை, தலையணை மந்திரோபதேசம் முதலிய பலவகையான நாவல்களை எழுதி வெளிட்டார்.

 

இந்திரா பார்த்தசாரதி:

நமது நாட்டில் நடமாடும் சில போலிகளின் தன்மையை இந்திரா பார்த்தசாரதியின் ‘தந்திர பூமி (1969), ‘சுதந்திர பூமி (1970) ஆகிய இரண்டு நாவல்களும் விளக்குகின்றன. ‘சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான ‘குருதிப் புனல்-இல் தஞ்சை மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விபரீத சம்பவத்தை சம கால உணர்வுடனும், தாரதம்மிய நோக்குடனும் இந்திர பார்த்தசாரதி கையாண்டிருக்கிறார். 


 கு.ராஜவேலு:


விடுதலைப் போராட்டத்தைப் பற்றி சுதந்திர இந்தியாவில் எழுதப்பட்ட ‘கல்கியின் ‘அலையோசை எனும் நாவலைத் தொடர்ந்து வெளிவந்தது, கு.ராஜவேலு-வின் ‘1942’ என்னும் நாவல். இவர் மாணவப் பருவத்திலேயே நாவல் எழுதி பரிசு பெற்றவர் ஆவார். இவரது மற்ற நாவல்கள்: காதல் தூங்குகிறது, மகிழம்பூ, இளவேனில், வானவீதி ஆகியனவாகும்.

 

நா.பார்த்தசாரதி:

நா.பார்த்தசாரதி அவர்கள் தம் கதைகளுக்கு வேண்டிய கருப்பொருளை, பெரும்பாலும் பழந்தமிழ் வரலாற்றிலும் அண்டை இராஜ்யங்களின் வரலாற்றிலும் இருந்து தேடிச் சேர்த்தவர். சமுதாய நாடகங்கள் படைப்பதில் வல்லவர். ஆத்மாவின் ராகங்கள், சத்திய வெள்ளம், நெஞ்சக்கனல், குறிஞ்சி மலர், சமுதாய வீதி, பொன் விலங்கு போன்றவை இவர்தம் படைப்புகளாகும். 

 

கல்கி:


ரா.கிருஷ்ணமூர்த்தி என்ற இவர், ‘கல்கி என்னும் புனைப்பெயர் கொண்டு பெரும் புகழீட்டியவர். இவர் ‘தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்டு என்று போற்றப்படுகிறார். தமது இருபத்துமூன்றாவது வயதிலேயே ‘விமலா என்ற நாவலைப் படைத்து இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு, ஓராண்டு சிறை தண்டனை ஏற்றுக்கொண்டபோது, சிறையில் இந்நாவலை எழுதினார். இதிகாசங்களைப் போன்ற பல பெரிய வரலாற்று நாவல்களைப் படைத்த கல்கியின் இரண்டாவது நாவல், ‘கள்வனின் காதலி. இதனையடுத்து 1939-ல் கல்கியின் ‘தியாக பூமி என்ற நாவல் வெளியானது. இவரது கடைசி நாவல் ‘அமரதாரா என்பதாகும்.

 

அகிலன்:

‘பெண் என்ற பெயரில் முதல் நாவலை எழுதிய அகிலன், தனது நாவல்கள் எல்லாவற்றிலுமே பெண்ணைத்தான் காட்சிப்பொருளாக வைத்துக் கொண்டார். பாவை விளக்கு, சித்திரப் பாவை, எங்கே போகிறோம்?, புது வெள்ளம் போன்றவை இவரின் சிறந்த நாவல்களாகும். இவரது கதாபாத்திரங்கள் வாயிலாக இவர் போலிக் கலையுணர்வை ஆத்திரத்தோடு சாடுவது வெளியாகிறது. மிகுந்த கற்பனை வளம் கொண்ட இவர், ஞானபீடப்பரிசு முதல் சாகித்ய அகாடமி பரிசு, தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு போன்ற பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 

 

மேல் நாட்டிலிருந்து வந்த இலக்கிய வடிவான நாவல், நமது மொழியில் முழுமை பெற்று, தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருப்பது, நம் தமிழ் நாவலாசிரியர்களுக்குப் புகழ் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

 

  தமிழ் நாவல், தன்னுடைய வளர்ச்சியில் பலப்பல புதுமைகளைப் புகுத்தியும், அடிக்கடி தொடக்க காலப் பண்புகளை உள்ளடக்கியும் ஒரே சீராக முன்னேறி வந்திருக்கிறது. மக்கள் பொழுதுபோக்குக்காகத்தான் நாவல் என்ற உணர்வைப் புறக்கணித்து, படைப்புகள் காலத்தை வென்று நிற்க வேண்டுமென்ற இலட்சியத்தைப் பின்பற்றினால், தமிழ் நாவல் இலக்கியம் இன்னும் பலவகைகளில் வளர்ச்சியடைந்து நம் தமிழுக்குப் புகழ்க்கூட்டும் என்பது உறுதி!

0 comments: