Oct 3, 2025
ஆன்றோரும் சான்றோரும் அகிலத்துப் பெரியோரும்
ஆய்ந்துதான்
தேடிடும் அமைதி – உலகின்
வல்லரசு, நல்லரசு
அறங்கூறும் பொதுவரசு
யாவரும்
நாடிடும் அமைதி!
வன்முறைப்
பேய்களால் வன்சாதி நோய்களால்
வரலாற்றில்
கறையாகலாமா? – நல்ல
பொன்னான
பூமிதனை புண்ணாக்கியே நிற்க
நல்லோர்கள்
பாதை தரலாமா?
புவியதை
மாற்ற புதுயுகம் ஆக்க
இளைஞர்கள்
எழுந்து வர வேண்டும்!
கவினூறும்
வையத்தில் அன்புதனை காட்டியே
அமைதிக்குப்
பாதையிட வேண்டும்!
பழங்கதை
தான்பேசி பசியோடு நாள்போக்கி
சோம்பிடும்
கூட்டம் ஒழிந்திடல் வேண்டும்!
அழகோடு
அறிவியலும் அறங்கூறும் வாழ்வியலும்
பழகிடும்
இளையோர் வளர்ந்திடல் வேண்டும்!
வீட்டின்
நலமும் நாட்டின் வளமும்
நாடி
உழைத்திடல் வேண்டும்!
அறிவினை
பெருக்கி அறியாமை நீக்கி – பொது
தொண்டில்
தோய்ந்திடல் வேண்டும்!
அறிவியல்
கல்வி ஆன்மிகம் தன்னில்
இளைஞர்கள்
மூழ்கிட வேண்டும்! – நம்
பாரதி
நெறியில் பற்பல கலைகளை
பாரினில்
பரப்பிடல் வேண்டும்!
மனிதனைக்
காக்கும் மாண்பதைக் கூறும்
நூல்களை
போற்றிடல் வேண்டும் – இளையோர்
உண்மையின்
நெறியில் உளமதை ஊக்கி
அமைதியை
காத்திட வேண்டும்!
தன்னலமில்லா
வையம் சமைத்திட
இளையோர்
உலகம் எழுந்திடல் வேண்டும்!
மண்ணின் மீதில் அமைதி தவழ்ந்திட
இளையோர் கரங்கள் இணைந்திடல் வேண்டும்!
மனிதன் மனத்தால் உயர்வடைய
மனிதம்
உலகில் செழிப்படைய
மாண்புறு
கொள்கை தருவதுதான்
மதங்கள்
என்னும் நெறிமுறையாம்!
இறைநெறி
வழியில் நாமெல்லாம்
முறையொடு
வாழ்வில் நடந்திட்டால்
அருள்நெறி
உலகில் தழைத்திடுமே – பொது
நெறியொடு
உலகம் திகழ்ந்திடுமே!
மனிதனை
மனிதன் நேசிக்கும்
மாண்பை
சொல்லிய மாமனிதர்
காட்டிய
நெறியே மதமாகும் – உலக
மாந்தர்
தழுவிடும் வழியாகும்!
புத்தர்
இயேசு காந்தி என்ற
இத்தரை
வியக்கும் வினைஞரொடு...
அன்னை தெரசா
என்றொரு தாயும்
நம்மில்
விதைத்தது அன்பாகும்!
இன்பம்
துன்பம் எதுவரினும்
மனிதர்க்கெல்லாம்
ஆறுதலை
அளிப்பதே
சான்றோர் நெறியாகும்
அதுவே அன்பு
மதமாகும்!
அன்பு மதத்தை
மாந்தரெல்லாம் – நாடி
வணங்கிடச்
செய்திடுவோம்! – மண்ணில்
மனிதரை
மனிதர் நேசித்து
மனத்தால் அனைவரும் ஒன்றாவோம்!
Mar 22, 2023
வையத்து மாந்தரெல்லாம்
வளமுடனே வாழுதற்கு
நலமான சிந்தனை வேண்டும்...
சிந்தனைக்கேற்ற செயலும் வேண்டும்!
நாட்டுநலனும் வீட்டுநலனும்
நன்றாய் ஓங்கிச் செழித்திடவே
நல்லோர் வாக்கைத் தொழுதிடல் வேண்டும்...
நாளும் அதன்வழி நடந்திடல் வேண்டும்!
பெண்கள் உயர்வதை உலகுக்குக் காட்டிய
பெரியோர் மண்ணில் பலருண்டு...
இதை உணர்ந்து நடந்தால்
பெண்கள் வாழ்வில் ஒளியுண்டு!
அகிலம் போற்றும் அன்னை தெரசா
அருள்நெறி வழியைக் காட்டியவர்!
இருட்டு வாழ்வில் மூழ்கிடுவோர்க்கு
புது வாழ்வாம் ஒளியைக் கூட்டியவர்!
வீரமும் அறிவும் பெண்கள் பெற்றால்
தீரமும் உயர்வும் ஓங்கிடுமே!
நல்ல சேவையும் பெருகித் தழைத்திடுமே!
மேத்தா பட்கர், நம் கிரண்பேடி
நாட்டுக் குழைக்கும் நங்கையராம்
நம் பாரதம் போற்றும் தனி மங்கையராம்!
பாரதி சொன்ன புதுமைப் பெண்ணாய்
பாரின் மீதில் வலம்வர வேண்டும்!
நாளும் நாளும் நாம் கற்று
நாட்டை உயர்த்தி நலம் தர வேண்டும்!
பெண்ணின் பெருமை உயர்ந்து நின்றால்
நம் மண்ணின் பெருமையும் உயர்ந்திடுமே!
இதை எண்ணத்தில் கொள்வோம்...
பொது நெறி சொல்வோம்...
பெண் உரிமை தன்னையே காத்திடுவோம்!
வள்ளுவன் வழியில் சமநெறி பாடி
அகமோடு அன்புஅதை, புறமோடு வீரமதை
நெகிழ்வோடு தந்த தமிழாம்!
முப்பாலை குறளிலே முறையாகக் கூறியே – முன்
நிற்கும் மூத்த மறையாம்!
பண்டுபுகழ் நாடெலாம் பணிவோடு நாடியே
பல்வளம் பாடும் மொழியாம்!
அன்புநெறி வாழ்வின்பொருள் எடுத்துச்சொல்லியம்பிடும்
காப்பியம் தந்த தமிழாம்! – தொல்
காப்பியம் தந்த தமிழாம்!
இனிமையால் எளிமையால் இளகிடும் தன்மையால்
ஈர்த்திடும் திறன் கொண்டதால்...
தனித்ததாய், சுவைத்ததாய், ஆய்வினுக்கருமையாய்,
இலக்கியம் சொன்ன தமிழாம்!
மன்னர்தம் கொடைத்திறம், களம்கண்ட படைத்திறம்
பாடிடும் பண்டு தமிழாம்!...
இன்னருள் இறைபுகழ் இதையத்தில் ஏற்றிடும்
இணையிலா மறையின் தமிழாம்!
அறிவியல், பொறியியல், ஆகாயவெளியியல்
ஆற்றலை ஆய்ந்த தமிழாம்!...
அப்துல் கலாமெனும் இணையிலா மனிதனை
உலகுக்கு தந்த தமிழாம்!
நீதிநெறி பாடியே நிலையாமை கூறியே
வாழ்வின் பொருளான தமிழாம்!
தமிழ்விடு தூதெனும் தனிநிகர் பாட்டுக்கு
பாடு பொருளான தமிழாம்!
இயல், இசை, கூத்தெனும் முத்தமிழ்
வடிவினில் மூன்று தமிழான தமிழாம்...
அயலாரின் ஆட்சியில் அவலங்கள் போக்கியே
தேசியம் காத்த தமிழாம்!
கம்பனை பாரதியை பொதுமறைதந்த வள்ளுவனை
உலகுக்கு தந்த தமிழாம்! – புது
அறிஞரை, ஆன்றோரை, அறிவியல் சான்றோரை
இனியும் தந்திடும் எங்கள் தமிழாம்!