Apr 28, 2013
"வாசிக்க ஆளில்லை,
எனினும்
வானப் புத்தகம்
திறந்திருந்தது..." - வைரமுத்து சொல்கிறார்.
அந்த மூன்றுமுனைச் சாலையின் சந்திப்பு எப்போதும் போல் சற்று பரபரப்புடனும், சற்றே மெதுவாகவும் இயங்கிக்கொண்டிருந்தது. மூன்றாவதுச் சாலை நுழைவின் இடது புறத்தில் ஒரு பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் எதிரே ஒரு அரசியல் தலைவரின் சேதப்படுத்தப்பட்ட சிலை. அதற்குப் பின்புறத்தில் சில பல சின்ன கடைகள் சிலைக்குக் கீழே ஒரு கோணிப்பையின் மேல் சில பழைய செருப்புகள்; அவற்றில் பிய்ந்த செருப்புகள், ஜோடியிழந்த சில ஒற்றைச் செருப்புகள், மற்றும் பழைய ஊசி, பசை என இன்னும் சில இத்யாதிகள் அடங்கும்.
கோணிப்பைக் கடையின் உரிமையாளன் கலைந்த தலையுடனும், கசங்கிய அழுக்குப் படிந்த உடையுடனும் தன் தொழிலைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான் போலும். அந்த மூன்றுமுனைச் சாலை மக்களின் யாருடைய செருப்பும் அறுந்து போகவில்லை எனினும், யாரும் தன்னை நாடி, தன் சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லையானாலும் - அவன் இல்லை என்றால் யாருடைய கால்களும் செருப்பணிந்து நடந்து செல்ல முடியாது என்பது போலவும், தானே அந்த மூன்றுமுனைச் சாலை மக்களின் கால் செருப்புகளை இயங்க வைக்கும் காரணகர்த்தா என நினைக்கும் பொருட்டு, அவன் தவறாமல் தன் கோணிப்பைக் கடையை அங்கு விரித்து விடுவான். தான் தினமும் இந்த உலகத்திற்கு மிக முக்கியமான செய்தி ஒன்றைக் கூற விரும்புவது போல் இருக்கும் அவனின் வருகை.
அவன் அப்போது ஒரு குச்சியை மெல்ல ஒரு காதில் விட்டு, எதையோ அதற்குள் தேடிக்கொண்டிருந்தான். நீர் குடித்த மேகம் வயிறு வெடித்து, பருகிய நீரையெல்லாம் அந்த மூன்றுமுனைச் சாலையின் மேல் தெளிக்கத் தொடங்கியது. ஜனக்கூட்டம் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி ஒளிய, நமது கோணிப்பைக் கடைகாரன் மட்டும் தன் காதில் புதையல் தேடுவதில் மெய்ம்மறந்து லயித்திருந்தான். சிலையும் செருப்புகளும் நனைந்து கொண்டிருந்தன...
மேகத்தின் வயிறு மூடியவுடன், அந்தச் சாலை முழுக்கக் குளித்திருந்தது; மக்கள் எல்லாம் தங்களை நனையாதபடி காத்துக்கொண்டத் திருப்தியுடன் யதார்த்தமான போது, தன் கோணிப்பைக் கடையை மெதுவாகச் சுருட்டித் தோளில் போட்டுக்கொண்டு பிரதானச் சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினான் அவன். அவன் முழுக்க நனைந்திருந்தான்; ஒழுங்கற்ற தன் பற்களைக் காட்டி வானத்தைப் பார்த்துச் சிரித்தவாறே அந்த மூன்றுமுனைச் சாலையைக் கடந்து போய் விட்டான் அவன்...
அடித்த மழையில் அந்தத் "தெருவோர தேவதூதனின்" அழுக்கடைந்த சட்டையும் வெளுத்திருந்தது!...
Posted by
தமிழச்சி சிவா-ஆயிஷா மைந்தன்
at
Sunday, April 28, 2013
Labels:
அனுபவங்கள்,
சிறுகதைகள்
0
comments
(என் நண்பனின் பார்வையில்...)...
'அக்கா'... - அம்மாவையும், சகோதரியையும், தோழியையும் ஒருங்கே வர்ணிக்கப் போதுமானதொரு ஒற்றை வார்த்தை,... இல்லை இல்லை; ஒற்றை 'உறவு'! அது எப்படியோ தெரியவில்லை,... இந்த அக்காக்களெல்லாம் நம் வெளிப் பார்வைக்கு அசட்டுத்தனமாகத் தெரிந்தாலும், தெளிவான செயல்திறனும், சலனமில்லாத அன்பும் கொண்டவர்களாய் இயற்கையாகவே அமைந்து விடுகிறார்கள்! அதுமட்டும் போதாதென இன்னும் பல அக்காக்கள் நம் அம்மாவின் முகத்தையும், புன்னகையையும் வேறு குத்தகைக்கு எடுத்துவிடுகிறார்கள்!... ('Dolly' ஆடு-லாம் என்னங்க பெரிய Cloning கண்டுபிடிப்பு!!!. இந்த அக்கா-அம்மா முக அமைப்பு தாங்க உண்மையான Cloning Technology!...) அதிலும் சில வீடுகளில் இந்த அக்காக்கள் தங்களுக்கெனத் தனியாக ஒரு சாம்ராஜ்ஜியமே உருவாக்கிவிடுவார்கள். அப்பப்பா! பொல்லாதவர்கள் இந்த cloning அம்மாக்கள்!... வீட்டின் எல்லா உறவுகளிடத்தும் பாசத்தை கொஞ்சம் extra-வாகவே பொழிந்து பொங்கி வழிய விட்டு, அனைவரது அன்பையும் வாங்கி சேலைத் தலைப்புடன் சேர்த்து இடுப்பில் செருகிக் கொள்வார்கள் இந்த விந்தை மனுஷிகள்!...
எனக்கு மூத்தவளும் கூட இப்படித்தான். எனக்கும் அக்கா-வுக்கும் வயது வித்தியாசம் மிக அதிகம். அதனால், எல்லாருக்கும் கிடைப்பதைவிட அவளுடைய பாசம் கொஞ்சம் அதிகமாகவே எனக்குக் கிடைக்கும். சோறு ஊட்டுவதில் இருந்து இரவு தலைகோதி தூங்கச் செய்வது வரை அம்மாவுடன் நீயா-நானா?-வெனப் போட்டிப் போட்டுக் கொண்டு 'என் அக்கா' எனக்குச் செய்வாள்.
ஒருநாள்... எனக்கு 8 வயசு-ன்னு நியாபகம். எங்க வீட்டுக்கு நெறைய உறவினர்கள் வந்தாங்க; வெளியாட்கள் பல பேரும் வந்திருந்தாங்க; அவங்களோட கொஞ்சம் என் வயசுப் பசங்களும் வந்திருந்தாங்க. பெரியவங்க எல்லாரும் பேசினாங்க; நான் அந்தப் பசங்கள கூட்டு சேர்த்து விளையாடப் போயிட்டேன். பிறகு, எல்லாரும் சாப்பிட்டாங்க; அப்புறம் அந்தப் பசங்களையும் அழைச்சுட்டு வந்தவங்கள்லாம் திரும்பப் போயிட்டாங்க. என் விளையாட்டுத் துணையெல்லாம் போச்சே-னு நெனைச்சேன்! (என்ன முறைப்பு!??... அப்போ எனக்கு 8 வயசுதான்! அதான் அப்டி 'வட போச்சே'-னு ஒரு feel கொடுத்தேன்! )
மீண்டும் ஒருநாள்... வீடு நெறைய உறவினர்கள் இருந்தாங்க... விதவிதமா சமையல் நடந்தது. புதுத்துணி எல்லாருக்கும் வாங்கினாங்க அக்கா தான் எனக்குப் போட்டு விட்டா. அக்கா அன்னைக்கு வழக்கமா இல்லாம ஏதோ வித்தியாசமா இருந்த மாதிரி எனக்குத் தெரிஞ்சது. அட, அவ சிரிச்சுட்டே இருக்காளே எப்பவும்! முன்னை விட என்னை அதிகமா கொஞ்சராளே!... ரெண்டு மூணு நாளுக்கப்புறம் எங்க அக்கா-வுக்கு திருமணம்-னு சொன்னாங்க. நான் விளையாட போயிட்டேன். அப்புறம் வீடே திருவிழா மாதிரி மாறிப் போயிருந்தது. அக்கா அழகா அலங்கரிக்கப்பட்டிருந்தா. நான் அவ பக்கத்துலயே இருந்தேன். அவ என் கையப் பிடிச்சுட்டே இருந்தா; ஆனா, யாரு அந்த மாமா? ஏன் எங்க அக்கா பக்கத்துலயே நிக்கிறாரு? சே! என்னை வேற முறைச்சு முறைச்சு பாக்குறாரே!...
அக்கா அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுகிறாள். அம்மா-வும் அக்காவுக்கு நிறைய ஆறுதல் சொல்கிறாள். அக்கா ஒவ்வொருவரையும் பார்த்து அழுகிறாள். 'எல்லாரும் அழுகிறார்கள்; அக்கா-வும் அழுகிறாள்; நானும் அழுகிறேன்'. அக்கா என்னைக் கட்டிக் கொண்டு முத்தம் தந்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுதுவிட்டு விடைபெறுகிறாள்; ஆனா, அக்கா யேன் அந்த மாமா-வோட போறா... அதற்குப் பிறகு அக்கா என் வீட்டில் எங்களுடன் இருக்கவில்லை. அடிக்கடி வந்து போவாள் மாமாவுடன். அப்போதெல்லாம் அக்கா விடைபெறும்போது யாரும் அழவில்லை; அவளும் அழவில்லை; நானும் அழவில்லை! மாறாக அக்கா மகிழ்ச்சியாக விடைபெறுகிறாள்,... அவளுடைய வீட்டிற்கு...
இதோ இப்போது நான் வளர்ந்துவிட்டேன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. நல்ல வேலையில் இருக்கிறேன்... சென்ற வாரம் என்னுடைய மற்றொரு அக்கா-வுக்குத் திருமணம் ஆயிற்று. எல்லா வேலைகளையும் முன்னின்று நான் செய்தேன். எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தோம். திருமணத்திற்கு முதல் நாளன்று அக்காவின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். அக்கா மகிழ்ச்சியுடன் பேசினாள். வழக்கம்போல் அவளது விரல்கள் வாஞ்சையுடன் என் தலைகோதின; அம்மா சமைத்த உணவை பாசத்துடன் எனக்கு ஊட்டிவிட்டாள்; அவளின் தெற்றுப்பல் சிரிப்பு எப்பொழுதையும் விட அப்போது அழகு கூடியிருந்தது; திருமணம் முடிந்து, முன்பொருநாள் என் மூத்த அக்கா-வுக்கு நேர்ந்த ஒன்று இவளுக்கும் நேர்கிறது... அதே நிகழ்வு... அக்கா திருமணமாகி தன்வீடு செல்கிறாள். இத்தனை ஆண்டுகளாய் என்னோடு விளையாடி, என் கோப-வெறுப்புகளை உள்வாங்கி, என் சுக-துக்கங்களைப் பங்கு போட்டு, சின்ன ஒரு அம்மா-வைப் போலிருந்த 'என் அக்கா' தன் வீடு செல்கிறாள்!... 8 வயதில் 'எல்லாரும் அழுதார்கள்; அக்காவும் அழுதாள்; நானும் அழுதேன்!...' இன்று அக்கா தன் வீடு போக வேண்டும். அவள் செல்வதற்கு முன் நான் அங்கிருந்து கிளம்ப வேண்டும். நேரே மாமாவிடம் சென்று விடைபெற்றேன்; பின் அக்காவிடம்..அவளை நேராய் பார்க்க முடியவில்லை,.. வார்த்தைகள் தடுமாறிக்கொண்டு வெளிவந்தன என்னிடமிருந்து "அக்கா, நான் கிளம்பணும்; நீ நல்லா இரு உன்னோட வீட்டுல,...." அவ்வளவு தான்.... வார்த்தைகள் முற்றிலும் உடைந்து விட்டன; எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. கண்ணீர்த் துளிகள் விழித்திரையை மறைத்து அக்கா-வின் உருவம் மங்கலாகிப் போனது; உடைந்த என் கண்ணீர்த் துளிகள் சிதறி அக்கா-வையும் கரைக்கிறது; 'என் அக்கா' என்னைக் கட்டிக் கொண்டு அழுகிறாள்; முத்தம் கொடுத்து என்னைத் தேற்றிச் செல்கிறாள்!...
இயல்பான ஒரு விடைபெறுதல். என் அக்கா இன்னொரு வீட்டில் தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தைப் பரப்பப் போகிறாள் என்றவொரு ஆத்ம திருப்தி இப்போது. மனம் சலனமற்றிருக்கிறது... கண்ணீர்த் துளிகள் கூட சில நேரங்களில் நம்முடைய உறவுகளுக்குள்ளே ஒளிந்து கிடக்கும் உணர்வுகளை அப்பட்டமாக்கி விடுகின்றன!... அழுவதும் கூட சில நேரங்களில் ஆறுதலான செயல் தான்!... நீண்ட ஒரு பெருமூச்சிற்குப் பிறகு மனம் யோசிக்கிறது,.. ஒருவேளை எனக்குத் திருமணமாகி என் மனைவி என் வீட்டிற்கு வரும்போதும் அவளுடைய தம்பிகளும் இப்படித்தானே உணர்வார்கள்!... ஹும்!... உலகம் ரொம்ப சின்னது தாங்க!... உறவுகள் உன்னதமானது!... ("ஆமா!... இவரு பெரிய கப்பல் வியாபாரி!... கண்டு புடிச்சு,..உலகத்துக்கு சொல்லிட்டாரு!..." இது தானே உங்க mind voice!...)
ஆனா எனக்கு இன்னும் ஒரு விஷயம் மட்டும் புரியலைங்க... "இந்த அக்காக்கள்-லாம் திருமணமானதும் ஏங்க வேற வீட்டுக்குப் போறாங்க?!!..." ஆ...ஆ...ஆ...அக்கா....என்னை விட்டுப் போகாத.......ம்...ம்...ம்... ("உள்ள அழுகறேன்,.. வெளிய சிரிக்கறேன்; நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்கறேன்!...") Please, சிரிக்காதீங்க!... ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் ஒரு சின்னக் கொழந்த இன்னமும் இருக்கு; தூங்கிட்டிருக்க அந்த கொழந்தைங்க இந்த அக்காக்களாலதான் எழுந்து அழுகுதுங்க!... (அப்பா... கடைசில ஒரு தத்துவம் சொல்லியாச்சு!... வந்த வேலைய முடிச்சுட்டோம்-ல!...)
'அக்கா'... - அம்மாவையும், சகோதரியையும், தோழியையும் ஒருங்கே வர்ணிக்கப் போதுமானதொரு ஒற்றை வார்த்தை,... இல்லை இல்லை; ஒற்றை 'உறவு'! அது எப்படியோ தெரியவில்லை,... இந்த அக்காக்களெல்லாம் நம் வெளிப் பார்வைக்கு அசட்டுத்தனமாகத் தெரிந்தாலும், தெளிவான செயல்திறனும், சலனமில்லாத அன்பும் கொண்டவர்களாய் இயற்கையாகவே அமைந்து விடுகிறார்கள்! அதுமட்டும் போதாதென இன்னும் பல அக்காக்கள் நம் அம்மாவின் முகத்தையும், புன்னகையையும் வேறு குத்தகைக்கு எடுத்துவிடுகிறார்கள்!... ('Dolly' ஆடு-லாம் என்னங்க பெரிய Cloning கண்டுபிடிப்பு!!!. இந்த அக்கா-அம்மா முக அமைப்பு தாங்க உண்மையான Cloning Technology!...) அதிலும் சில வீடுகளில் இந்த அக்காக்கள் தங்களுக்கெனத் தனியாக ஒரு சாம்ராஜ்ஜியமே உருவாக்கிவிடுவார்கள். அப்பப்பா! பொல்லாதவர்கள் இந்த cloning அம்மாக்கள்!... வீட்டின் எல்லா உறவுகளிடத்தும் பாசத்தை கொஞ்சம் extra-வாகவே பொழிந்து பொங்கி வழிய விட்டு, அனைவரது அன்பையும் வாங்கி சேலைத் தலைப்புடன் சேர்த்து இடுப்பில் செருகிக் கொள்வார்கள் இந்த விந்தை மனுஷிகள்!...
எனக்கு மூத்தவளும் கூட இப்படித்தான். எனக்கும் அக்கா-வுக்கும் வயது வித்தியாசம் மிக அதிகம். அதனால், எல்லாருக்கும் கிடைப்பதைவிட அவளுடைய பாசம் கொஞ்சம் அதிகமாகவே எனக்குக் கிடைக்கும். சோறு ஊட்டுவதில் இருந்து இரவு தலைகோதி தூங்கச் செய்வது வரை அம்மாவுடன் நீயா-நானா?-வெனப் போட்டிப் போட்டுக் கொண்டு 'என் அக்கா' எனக்குச் செய்வாள்.
ஒருநாள்... எனக்கு 8 வயசு-ன்னு நியாபகம். எங்க வீட்டுக்கு நெறைய உறவினர்கள் வந்தாங்க; வெளியாட்கள் பல பேரும் வந்திருந்தாங்க; அவங்களோட கொஞ்சம் என் வயசுப் பசங்களும் வந்திருந்தாங்க. பெரியவங்க எல்லாரும் பேசினாங்க; நான் அந்தப் பசங்கள கூட்டு சேர்த்து விளையாடப் போயிட்டேன். பிறகு, எல்லாரும் சாப்பிட்டாங்க; அப்புறம் அந்தப் பசங்களையும் அழைச்சுட்டு வந்தவங்கள்லாம் திரும்பப் போயிட்டாங்க. என் விளையாட்டுத் துணையெல்லாம் போச்சே-னு நெனைச்சேன்! (என்ன முறைப்பு!??... அப்போ எனக்கு 8 வயசுதான்! அதான் அப்டி 'வட போச்சே'-னு ஒரு feel கொடுத்தேன்! )
மீண்டும் ஒருநாள்... வீடு நெறைய உறவினர்கள் இருந்தாங்க... விதவிதமா சமையல் நடந்தது. புதுத்துணி எல்லாருக்கும் வாங்கினாங்க அக்கா தான் எனக்குப் போட்டு விட்டா. அக்கா அன்னைக்கு வழக்கமா இல்லாம ஏதோ வித்தியாசமா இருந்த மாதிரி எனக்குத் தெரிஞ்சது. அட, அவ சிரிச்சுட்டே இருக்காளே எப்பவும்! முன்னை விட என்னை அதிகமா கொஞ்சராளே!... ரெண்டு மூணு நாளுக்கப்புறம் எங்க அக்கா-வுக்கு திருமணம்-னு சொன்னாங்க. நான் விளையாட போயிட்டேன். அப்புறம் வீடே திருவிழா மாதிரி மாறிப் போயிருந்தது. அக்கா அழகா அலங்கரிக்கப்பட்டிருந்தா. நான் அவ பக்கத்துலயே இருந்தேன். அவ என் கையப் பிடிச்சுட்டே இருந்தா; ஆனா, யாரு அந்த மாமா? ஏன் எங்க அக்கா பக்கத்துலயே நிக்கிறாரு? சே! என்னை வேற முறைச்சு முறைச்சு பாக்குறாரே!...
அக்கா அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுகிறாள். அம்மா-வும் அக்காவுக்கு நிறைய ஆறுதல் சொல்கிறாள். அக்கா ஒவ்வொருவரையும் பார்த்து அழுகிறாள். 'எல்லாரும் அழுகிறார்கள்; அக்கா-வும் அழுகிறாள்; நானும் அழுகிறேன்'. அக்கா என்னைக் கட்டிக் கொண்டு முத்தம் தந்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுதுவிட்டு விடைபெறுகிறாள்; ஆனா, அக்கா யேன் அந்த மாமா-வோட போறா... அதற்குப் பிறகு அக்கா என் வீட்டில் எங்களுடன் இருக்கவில்லை. அடிக்கடி வந்து போவாள் மாமாவுடன். அப்போதெல்லாம் அக்கா விடைபெறும்போது யாரும் அழவில்லை; அவளும் அழவில்லை; நானும் அழவில்லை! மாறாக அக்கா மகிழ்ச்சியாக விடைபெறுகிறாள்,... அவளுடைய வீட்டிற்கு...
இதோ இப்போது நான் வளர்ந்துவிட்டேன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. நல்ல வேலையில் இருக்கிறேன்... சென்ற வாரம் என்னுடைய மற்றொரு அக்கா-வுக்குத் திருமணம் ஆயிற்று. எல்லா வேலைகளையும் முன்னின்று நான் செய்தேன். எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தோம். திருமணத்திற்கு முதல் நாளன்று அக்காவின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். அக்கா மகிழ்ச்சியுடன் பேசினாள். வழக்கம்போல் அவளது விரல்கள் வாஞ்சையுடன் என் தலைகோதின; அம்மா சமைத்த உணவை பாசத்துடன் எனக்கு ஊட்டிவிட்டாள்; அவளின் தெற்றுப்பல் சிரிப்பு எப்பொழுதையும் விட அப்போது அழகு கூடியிருந்தது; திருமணம் முடிந்து, முன்பொருநாள் என் மூத்த அக்கா-வுக்கு நேர்ந்த ஒன்று இவளுக்கும் நேர்கிறது... அதே நிகழ்வு... அக்கா திருமணமாகி தன்வீடு செல்கிறாள். இத்தனை ஆண்டுகளாய் என்னோடு விளையாடி, என் கோப-வெறுப்புகளை உள்வாங்கி, என் சுக-துக்கங்களைப் பங்கு போட்டு, சின்ன ஒரு அம்மா-வைப் போலிருந்த 'என் அக்கா' தன் வீடு செல்கிறாள்!... 8 வயதில் 'எல்லாரும் அழுதார்கள்; அக்காவும் அழுதாள்; நானும் அழுதேன்!...' இன்று அக்கா தன் வீடு போக வேண்டும். அவள் செல்வதற்கு முன் நான் அங்கிருந்து கிளம்ப வேண்டும். நேரே மாமாவிடம் சென்று விடைபெற்றேன்; பின் அக்காவிடம்..அவளை நேராய் பார்க்க முடியவில்லை,.. வார்த்தைகள் தடுமாறிக்கொண்டு வெளிவந்தன என்னிடமிருந்து "அக்கா, நான் கிளம்பணும்; நீ நல்லா இரு உன்னோட வீட்டுல,...." அவ்வளவு தான்.... வார்த்தைகள் முற்றிலும் உடைந்து விட்டன; எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. கண்ணீர்த் துளிகள் விழித்திரையை மறைத்து அக்கா-வின் உருவம் மங்கலாகிப் போனது; உடைந்த என் கண்ணீர்த் துளிகள் சிதறி அக்கா-வையும் கரைக்கிறது; 'என் அக்கா' என்னைக் கட்டிக் கொண்டு அழுகிறாள்; முத்தம் கொடுத்து என்னைத் தேற்றிச் செல்கிறாள்!...
இயல்பான ஒரு விடைபெறுதல். என் அக்கா இன்னொரு வீட்டில் தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தைப் பரப்பப் போகிறாள் என்றவொரு ஆத்ம திருப்தி இப்போது. மனம் சலனமற்றிருக்கிறது... கண்ணீர்த் துளிகள் கூட சில நேரங்களில் நம்முடைய உறவுகளுக்குள்ளே ஒளிந்து கிடக்கும் உணர்வுகளை அப்பட்டமாக்கி விடுகின்றன!... அழுவதும் கூட சில நேரங்களில் ஆறுதலான செயல் தான்!... நீண்ட ஒரு பெருமூச்சிற்குப் பிறகு மனம் யோசிக்கிறது,.. ஒருவேளை எனக்குத் திருமணமாகி என் மனைவி என் வீட்டிற்கு வரும்போதும் அவளுடைய தம்பிகளும் இப்படித்தானே உணர்வார்கள்!... ஹும்!... உலகம் ரொம்ப சின்னது தாங்க!... உறவுகள் உன்னதமானது!... ("ஆமா!... இவரு பெரிய கப்பல் வியாபாரி!... கண்டு புடிச்சு,..உலகத்துக்கு சொல்லிட்டாரு!..." இது தானே உங்க mind voice!...)
ஆனா எனக்கு இன்னும் ஒரு விஷயம் மட்டும் புரியலைங்க... "இந்த அக்காக்கள்-லாம் திருமணமானதும் ஏங்க வேற வீட்டுக்குப் போறாங்க?!!..." ஆ...ஆ...ஆ...அக்கா....என்னை விட்டுப் போகாத.......ம்...ம்...ம்... ("உள்ள அழுகறேன்,.. வெளிய சிரிக்கறேன்; நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்கறேன்!...") Please, சிரிக்காதீங்க!... ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் ஒரு சின்னக் கொழந்த இன்னமும் இருக்கு; தூங்கிட்டிருக்க அந்த கொழந்தைங்க இந்த அக்காக்களாலதான் எழுந்து அழுகுதுங்க!... (அப்பா... கடைசில ஒரு தத்துவம் சொல்லியாச்சு!... வந்த வேலைய முடிச்சுட்டோம்-ல!...)
Subscribe to:
Comments (Atom)

