Dec 15, 2019

உப்பு, புளி, மிளகாய்! - 'கேசரி'

‘கேசரி’ – பேர கேட்டதும் சும்மா நெய்யும் முந்திரியும் நாவில் நாட்டியம் ஆடும் அந்த வஸ்து நினைவில் வந்து போகிறதா?!!!.... பெரும்பாலான தமிழகத் திருமண பந்திகள்-ல முக்கிய ஐட்டமா இடம் பெரும் பண்டம்-னு இதுக்கு ஒரு அவார்டே தரலாம்ங்க. அட,..ஆமாங்க, இந்த பதிவுல நாம பாக்கப் போறது கேசரி-யோட கதையைத்தான்.

மேலோட்டமா பார்த்தால் இந்த கேசரி வகையறா தென் இந்திய இனிப்பு வகையில தான் சேர்த்தி ஆகுது-ங்க. அதிலும் முக்கியமா கர்நாடகா பகுதிகள்-ல இந்த கேசரி ஒரு பொது உணவு.

கேசரி என்றால் வட மொழியில் 'அரசன்' என்று பொருள். இனிப்புகளுக்கெல்லாம் அரசனாக விளங்குவது போல் உள்ளதால் இதற்கும் கேசரி எனப் பெயரிட்டனர் என்றும் ஒரு விளக்கம் உண்டு.


கேசரி பெரும்பாலும் ரவை அல்லது செமோலினா (அதாவது ‘சேமியா’) கொண்டு சமைக்கப்படுகிறது. ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, சூடானதும், அதில் நாலு கரண்டி பசும் நெய் விட்டு, அதில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை ஆகியவற்றை கொட்டி வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளவும்; அதே நெய்யில் தண்ணீர் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வறுத்த ரவையைக் கொட்டிக் கிளறி அவ்வப்போது நெய் சேர்த்துக் கொண்டே இருக்கவும். ரவை லேசாக வேக ஆரம்பிக்கும்போது அந்த கலவையில் சர்க்கரை-ஐ கொட்டிக் கிளறி மூடி வைத்து இறக்கவும். மேலே சேர்க்கைக்கு வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம், திராட்சை, கூடவே கொஞ்சம் தூக்கலாக குங்குமப்பூ-வை சேர்த்து....சேர்த்து...சேர்த்து... அடேயப்பா... நாவில் எச்சில் ஊறுகிறது...

இவ்வளவு தாங்க கேசரி. வெரி சிம்பிள்! அப்படியே ஸ்பூனில் ஒரு விள்ளல் எடுத்து வாயில் வைத்தால், நாவில் வழுக்கிக் கொண்டு தொண்டையில் இறங்கும் இதன் சுவை, ஏப்பம் விடும் வரை அப்படியே இருக்கும்.

இதனுடைய 'கார version' தான் உப்புமா என்றும் சொல்வார்கள். இதே ரவா கேசரியை சேமியாவிலும் செய்யப்படும் இந்த இனிப்பு உணவு 12-ஆம் நூற்றாண்டிலேயே சாளுக்கிய வம்ச மன்னர்களால் பெரிதும் விரும்பி உண்ணப்பட்டுள்ளது.


இது தாங்க நம்ம கேசரியோட மிகக் குறுகிய சுவையான கதை. உடனே போய் கேசரியை செய்து சாப்பிட்டு இந்த ஜன்ம பிராபல்யத்தை முடிச்சு வைங்க. அடுத்த ‘உப்பு, புளி, மிளகாய்!’ பதிவில் சந்திப்போம். விரைவில்!

Feb 9, 2019

உப்பு, புளி, மிளகாய்! - 'சாக்லெட்’

உப்பு புளி மிளகாய் வரிசையில் இந்த முறை நாம பார்க்கப் போறது சின்ன குழந்தைகள்-ல இருந்து பெரியவங்க வரை எல்லாருக்கும் பிடித்த ‘சாக்லெட்’ பற்றி!

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய மத்திய அமெரிக்க மழைக் காடுகள் பற்றிய குறிப்புகளில் சாக்லெட்-டின் பயன்பாடு குறித்து சொல்லப்பட்டிருகிறது. உயர் வெப்பநிலையும், அதிக மழைப் பொழிவும் கொண்ட இந்த வெப்பநிலைக் காடுகளே கோகோ மரங்கள் சாகுபடிக்கு ஏதுவான இடமாக அமைந்தது. இந்த கோகோ மரங்களிலிருந்தே சாக்லெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.


மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்த மாயன் நாகரிக மக்கள் கோகோ மரங்களை புனிதத் தன்மை கொண்டவையாக வழிபட்டு வந்துள்ளனர். கோகோ என்பது மாயன் மொழியில் ‘கடவுளின் உணவு’ எனப் பொருள் கொண்டு வந்தது. பின்னர் ஏற்பட்ட லத்தீன் மொழியில், ‘தேவர்கள் உண்ணக்கூடிய உணவு’ எனப் பொருள்படும் Theobrama Cacao என்று இவை வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஐரோப்பியர்கள், இவற்றை சுருக்கி ‘கோகோ’ என்று வழங்கினர்.

மாயர்கள் கோகோ மரங்களிலிருந்து பெறப்படும் கோகோ விதையை (cocoa beans) வறுத்து, சோளம் மற்றும் மிளகாய் வகையை கலந்த காரமாகவும் கசப்பும் இனிப்பும் கலந்ததுமான பானமாகக் காய்ச்சிப் பருகி வந்தனர். மேலும் இந்த கோகோ கஞ்சி பானமானது, விழாக் கொண்டாட்டங்களின் போதும், செல்வந்தர்கள் மற்றும் மதகுருமார்கள் போன்றோருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது.


1615- இல் பிரெஞ்சு நாட்டில் நடந்த ஒரு அரச திருமண வரவேற்பில் இது போன்ற ஒரு பானம் வழங்கப்பட்டது. பின்னர் 1662-களில் இங்கிலாந்து இதனை “சாக்லேட்” எனும் பெயருடன் (Chocolate) வரவேற்றது. மேலும் 1847-இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ப்ரை & சகோதரர்கள்’ உலகின் முதல் திட சாக்லேட்-ஐ அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அதன் கசப்புச் சுவையால் மக்களிடம் அது பெருத்த வரவேற்பு பெறாமல் போனது. அதன் பின்பு, மீண்டும் 1874-இல் புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து சாக்லேட் வல்லுனரான டானியல் பீட்டர் என்பவர் சாக்லேட்டின் கசப்புச் சுவையை மட்டுப்படுத்த எண்ணி அதனுடன் பல்வேறு பொருட்களைச் சேர்த்து ஆராயத் தலைப்பட்டார். முடிவில் சாக்லேடுடன் பால் கலந்து செய்த அவரின் முயற்சி பெரும் வெற்றி கண்டது. மக்களும் அதனை மிகவும் விரும்பி ஏற்றுக்கொண்டனர்.


இந்த சாக்லேட் உலகம் முழுதும் பிரபலமடைந்ததும், டானியல் பீட்டர் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு உணவு வல்லுனர்களும் புதிய புதியச் சுவைகளில் சாக்லேட்டுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். அதில் சில வகை சாக்லெட்டுகளான Milk Chocolate, Bitter Chocolate,  White Chocolate   போன்றவை மிகப் பிரபலமடைந்தன.

இதுவே நாம் அவ்வப்போது விரும்பி உண்ணும் சுவையான சாக்லெட்டுகளின் வரலாறு.

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம்!