May 28, 2013

மிக நீண்ட இரயில் பயணமும், கொஞ்சம் மஞ்சள் உலோகமும்,...

இது என்னுடைய 'மிக நீண்ட' ஒரு இரயில் பயணம். வெகு நாட்களுக்குப் பின் நான் மேற்கொள்ளும் மிக நீண்ட ஒரு இரயில் பயணம்; என்னுடைய பெரிய குடும்பத்தின் பெரும்பாலானோரோடு நான் மேற்கொண்டிருக்கும் இனிய ஒரு இரயில் பயணம்... என் அண்ணனின் கடைக் குட்டி மகன் அவ்வப்போது எனக்கு செல்லமாய்த் தொல்லை கொடுத்தாலும் அவனின் குறும்புகளை உடனிருந்து பார்த்து, பேசி, பொய்க்கோபம் காட்டி, அவனை என் கைக்குள் வைத்துக் கூட்டிச் செல்லும் இது,....'மிக நீண்ட' என்னுடைய இரண்டாவது இரயில் பயணம்....

இரயில் சூழலில் இருந்து கொஞ்சம் விடுபட எண்ணி, குட்டிப் பையனை அதட்டி உட்கார வைத்துவிட்டு, கையில் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு வாசிக்கப் பிரயத்தனப்பட்டேன்.  குட்டிப் பையன் அடங்கின பாடில்லை. "இது என்ன? இது ஏன் இப்படி இருக்கு? Train ஏன் ஆடுது? நான் வெளில போகணுமே!..." என்றெல்லாம் என்னிடம் நொடிக்கொரு கேள்வி கேட்டு அலுத்துப் போயிருந்தான்... இடையிடையே அலைபேசி வேறு சிணுங்கிச் சிணுங்கி தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. மீண்டும் புத்தகத்தில் முகம் புதைக்கிறேன்.

கண்கள் வார்த்தைகளினூடும், அவற்றின் எழுத்துகளினூடும் சுற்றிச் சுற்றி சென்று கொண்டிருக்கிறது. இந்த சுவாரசியமான இரயில் சூழலைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், மனம் புத்தகத்தின் எழுத்துக்களைக் கொஞ்சம் கையில் அள்ளிச் சிதற விட்டாற்போல் ஆங்காங்கே சிதறிக் கொண்டிருக்கிறது...
இது என்னுடைய மிக நீண்ட ஒரு இரயில் பயணம்... 'மிக நீண்ட'---தூரத்தைக் குறிக்கும் ஒரு அளவைச் சொல். இந்த தூரம் எதனை மையப்படுத்திக் கணக்கிடப்படுகிறது?--இன்ச்-களிலா? செண்டி மீட்டரா? அல்லது கிலோ மீட்டரா?... இல்லை. என்னுடைய இந்த மிக நீண்ட இரயில் பயணத்தை 'மன' அளவை கொண்டு அளந்து கொண்டிருக்கிறேன் நான்!

என்னுடைய முதல் மிக நீண்ட இரயில் பயணம்-அது தமிழ்நாட்டின் தென் பகுதியிலிருந்து என் வசிப்பிடமான அதன் தலைநகருக்குப் போவதாக இருந்தது. ஆம்! உண்மையில் அது ஒரு ஆழமான, மனசஞ்சலங்களுடன், மற்றும் குடும்பத்துப் பெரியவர்களுடன் நான் மேற்கொண்ட மிக நீண்ட இரயில் பயணம்!

தூரத்து உறவினர் ஒருவரைச் சந்திக்க வேண்டி அங்கே செல்ல நேர்ந்தது. நலம் விசாரிப்புகள், விருந்து உபச்சாரங்கள் எல்லாம் முடிந்து கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அலைபேசியில் ஆராய்ந்து கொண்டிருந்தேன், வழக்கம்போலவே! அந்தக் குடும்பத்து மூத்த பெண்ணின் திருமணத்தை நோக்கி அவர்களின் பேசு திரும்பியது. அவள் திருமண வயதைக் கடந்து விட்டிருந்தாள். அதாவது, இப்போது அவள் ஒரு முதிற்கன்னி. என்னுடைய வீட்டுப் பெரியவர்களும் விடாமல் கேள்வி கேட்டுக் குடையவே, அவளுடைய வயது முதிர்ந்த அப்பா மெல்ல குரல் தழுதழுக்கக் கூறினார்: "நெறைய வரன் வந்து தான் போகுது, எதுவும் அமையல; எம்பொண்ணு தங்கம் மாதிரி; விலை ஏறிகிட்டே தான் போகும்; வாங்குவாரில்ல!..." - என்று கூறி முடிக்கும் முன்னரே குரல் தழுதழுத்து விட்டிருந்தது. அறையில் ஆழ்ந்த நிசப்தம். என்னுடைய வேலையிலிருந்து விடுபட்டு அந்தச் சூழலில், அந்தப் பெரியவரின் வார்த்தைகளில் நானும் கரைந்திருந்தேன்...

திருமண வயதைக் கடந்து நிற்கும் ஒரு முதிற்கன்னியின் தந்தை, தன்னுடைய மகளுக்கு வயதேறிக் கொண்டே போவதையும், அவளுக்குத் திருமணம் செய்விக்க முடியாத தன்னுடைய இயலாமையையும் எவ்வளவு சுருக்கமாக தற்குறிப்பேற்றிச் சொல்லிவிட்டார். அனால், அதைச் சொல்லும்போது அவருடைய மனம் எப்படிப் பதைத்திருக்கும்; எப்படி எல்லாம் துடித்திருக்கும்; இனம் புரியாத பயமும், கலவரமும் அடைந்திருந்தது அவருடைய வெளுத்த முகம். காரணம் பிடப்பட்ட அதிக நேரமாகவில்லை எங்களுக்கு.

தங்கம் - வெறுமனே ஒரு உலோகம்; மஞ்சள் நிறம் பூசிய ஒரு உலோகம்; மின்னிடும் தன்மை கொண்ட ஒரு உலோகம்...இப்படி வெறுமனே ஒரு உலோகம் அங்கே ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் கருவியாகிவிட்டிருந்தது. பெண்ணுக்குப் பொன் செய்வித்து அழகு பார்க்கும் பண்பாடு மாறி, இப்போது பெண்ணுக்குப் பொன் செய்வித்து 'அளவு' பார்க்கிறார்கள். இங்கே இவளும் அந்த அளவுகோலின் மீது வெகு நாட்களாய் நின்று கொண்டிருக்கிறாள்.... சாதாரணமாக வெளியிலிருந்து பார்த்தால் சின்ன விஷயமாய்த் தெரிந்தாலும், அதை கொஞ்சம் தட்டித் துடைத்து கண்ணுக்கருகில் பிடித்துப் பார்க்கையில் பூதாகரமாகி நிற்கிறது.

அத்தனை நேரமும் அமைதியால் ஆழ்ந்திருந்த எங்களை என் அண்ணனின் குரல் சுயத்திற்குக் கொண்டு வந்தது. "இப்போ என்ன ஆச்சு? நீங்க கல்யாண வேலையத் தொடங்குங்க; தம்பிங்க நாங்க இருக்கோம்; கல்யாணத்த முடிச்சுடலாம்" - என்ற உறுதியான குரல். என் அண்ணன் ஒரு பொறியாளன். இயல்பிலேயே கணக்குப்போடும் பொறியியல் மூளை கொண்டவன். அப்படி ஒன்றும் எங்களுக்கு வசதி இல்லை; நாங்களும் நடுத்தர வர்க்கம் தான். அந்தப் பெரியவரோ எங்களுக்கு தூரத்து சொந்தம் தான்; நெருங்கின தொடர்பில்லை; ஆனால், அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள் - முதிற்கன்னியாய் இருக்கிறாள்; அவளுக்குத் திருமணம் செய்வித்தாக வேண்டும்.

அந்தப் பெரியவர் அதிர்ச்சியாகி அண்ணனைப்பார்த்தார். அவர் கண்களில் பல கேள்விகள் குவிந்திருந்தன. நம்ப முடியாத ஒரு வறட்டுப் பார்வை அது. அண்ணனை அவர் பார்த்துக் கொண்டேயிருந்தார். அண்ணனோ சாந்தமான முகத்துடன் அவருடைய கண்களை நோக்கிப் புன்னகைத்தான். அந்தப் பெரியவரின் கண்களில் கண்ணீர் திரண்டு உருண்டது.

- இப்படியாக மனதில் ஆழப் பதிந்த ஒரு நிகழ்வைச் சுமந்தும், அந்தத் துயரத்தினோடும், அந்தப் பெரியவரின் விளக்கத்தினோடும், கொஞ்சம் மஞ்சள் நிற யோசனைகளோடுமாக அமைந்தது என்னுடைய முதல் மிக நீண்ட இரயில் பயணம்!...
இது என்னுடைய இரண்டாவது மிக நீண்ட மறக்கவியலாத இரயில் பயணம்... எங்களின் குட்டி வாண்டுப் பையன் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து மீண்டும் எல்லாரையும் நச்சரிக்கத் தொடங்கியிருந்தான்; மற்றவர்கள் பேசிக்கொண்டும், எதையோ சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்கள்; அண்ணி-யின் பாதுகாப்பில், கொஞ்சம் மஞ்சள் உலோகம் - ஒரு முதிற்கன்னியின் திருமணக் கனவுகளைச் சுமந்து, எங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது - அந்தப் பெரியவரின் வீட்டிற்கு; என் அண்ணன் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்தவாறே தூங்கிக் கொண்டிருக்கிறான்...

எங்கிருந்தோ சரேலென்று என் மடியில் விழுந்து, என் கழுத்தைக் கட்டிக் கொண்டு என்னை தன் மழலை மொழியில் கொஞ்சத் தொடங்கிவிட்டான் என் அண்ணனின் கடைக் குட்டி வாண்டுப் பையன்... சிரித்துக் கொண்டே அண்ணனைப் பார்த்தேன்; அவனுடைய முகம் சலனமற்றிருக்கிறது; மன நிறைவு உதட்டின் ஓரத்தில் ஒதுங்கியிருக்கும் சின்னப் புன்னகையில் அப்பட்டமாய்த் தெரிகிறது; குட்டிப் பையனைப் போல் நானும் என் அண்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனைக் கொஞ்ச வேண்டும் போல் தோன்றுகிறது... என் மடியிலிருந்த வாண்டுப் பயலை இறுக அணைத்துக் கொண்டேன்...

0 comments: