Dec 16, 2019

உப்பு, புளி, மிளகாய்! - 'பிரியாணி'


அதாவது,....ஒரு நிமிஷம்! எனக்கு இத எப்படி சொல்றதுன்னே தெரியலைங்க! சொல்ல வாயெடுத்தாலே நாக்கில் ஜலம் ஊறுகிறது! சரி! ரொம்ப சஸ்பென்ஸ் வெக்காம சொல்லிடறேன்! இந்த 'உப்பு, புளி, மிளகாய்!' பதிவுல நாம பேச போறது நம்ம எல்லாரும் விரும்பி சாப்பிடுற 'பிரியாணி' பத்தி தாங்க! "அதென்னமோ தெரியல...என்ன மாயமோ தெரியல! பிரியாணி-னு சொன்ன உடனே பசி வந்துருது! அபிராமி...அபிராமி!...அட..இல்ல இல்ல... பிரியாணி...பிரியாணி!" சரி வாங்க சாப்பிடுவோம்!?!... சே சே! வாங்க பேசுவோம்!!!..

பிரியாணி எப்படி, எங்கேயிருந்து இந்தியா வந்தது?! - இதுக்கு பல பல கதைகள் நம் இந்தியா முழுக்கப் பரவி இருக்குங்க! அதுல, நமக்குத் தெரிஞ்ச, அறிஞ்ச விஷயங்களை மட்டும் நாம பாக்கலாம்

இந்தியாவை பலதரப்பட்ட மன்னர்கள் படை எடுத்து ஆட்சி செய்துருக்காங்க. உதாரணமா, துருக்கியர்கள், அரேபியர்கள், பெர்சியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள்... இப்படி பலர் நம்ம நாட்டை படையெடுத்து வந்து இங்கேயே ஆட்சியை நிலைநாட்ட பல வகை உத்திகளை கையாண்டார்கள்! அப்படி இந்த நாட்டு படை நம்ம நாட்டுக்குள்ள வரும்பொழுதே அவர்கள் தங்களுடைய பண்பாடு, போர் முறை, உணவு முறை போன்றவற்றையும் தங்களுடனே கொண்டுவந்து விட்டார்கள். அப்படி வந்தது தான் பிரியாணி என்னும் "ஊண் சோறு"!...



அட! அது என்னங்க "ஊண் சோறு"?!! அப்படி-னு கேக்கறீங்களா

நம்ம ஊரை ஆட்சி செய்ய வந்த மன்னர்களின் விருப்ப உணவாக அமைந்தது அரிசி உணவில் மாமிசம் சேர்த்து செய்யப்பட ஒருவகை மசாலா உணவு. பின்னர், 15-ஆம் நூற்றாண்டு தொடங்கி 19-ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சிய முகலாயர்கள் தாங்களும் தங்கள் பங்குக்கு இந்த மாமிச உணவை பிளாப், கபாப், பிரியாணி என தங்கள் முறையில் செய்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள்

இந்த முகலாயர்களின் வருகைக்கு முன்பாகவே, கி.மு.2-ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் இலக்கியத்தில் "ஊண் சோறு" எனும் உணவு குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழக மன்னர்கள் அவர்களது போர் வீரர்களுக்கு அரிசி-யில் நெய், புலால்,மஞ்சள், மிளகு, கருவேப்பிலை முதலியவற்றை சேர்த்து உணவாக்கி படைத்தனர்.  இந்த வகை ஊண் உணவும் முகலாயர்கள் கொண்டு வந்த உணவும் சற்றேரக்குறைய ஒரே மாதிரி இருந்துள்ளது

சரி. இந்த 'பிரியாணி' அப்படிங்கிற வார்த்தைக்குப் பொருள் என்ன?! பிரியாணி என்னும் சொல் 'பிரியன்' (Birian) என்ற பெர்சிய மொழியில் இருந்து வந்தது. பிரியன் என்றால்  "சமைப்பதற்கு முன் வறுக்கப்பட்டது" என்று பொருள்

பல ஆண்டுகளுக்கு முன்னாள் உயர்குடி மக்கள் மட்டுமே சமைத்து உண்ணக்கூடிய உணவாக இருந்த பிரியாணி, இன்று தெருவுக்குத் தெரு, மூளைக்கு மூளை ஒரு பிரியாணி கடை, ஆற்காடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, முகல் பிரியாணி, கல்கத்தா பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி என மாற்றம் கண்டு, பல வகை பிரியாணிகளாக வளம் வருகின்றன.

எழுத்தாளர் பா.ராகவன் சொல்வது போல், "உணவின் ருசியே, வாழ்வின் ருசி" என்பதை கருத்தில் கொண்டு பிரியாணி செரிக்க வாழ்ந்திடுவோமாக!

சந்திப்போம் விரைவில்!

0 comments: