Mar 22, 2023

தமிழின் பெருமை!

 அகமோடு அன்புஅதை, புறமோடு வீரமதை

நெகிழ்வோடு தந்த தமிழாம்!

முப்பாலை குறளிலே முறையாகக் கூறியே – முன்

நிற்கும் மூத்த மறையாம்!

 

பண்டுபுகழ் நாடெலாம் பணிவோடு நாடியே

பல்வளம் பாடும் மொழியாம்!

அன்புநெறி வாழ்வின்பொருள் எடுத்துச்சொல்லியம்பிடும்

காப்பியம் தந்த தமிழாம்! – தொல்

காப்பியம் தந்த தமிழாம்!

 

இனிமையால் எளிமையால் இளகிடும் தன்மையால்

ஈர்த்திடும் திறன் கொண்டதால்...

தனித்ததாய், சுவைத்ததாய், ஆய்வினுக்கருமையாய்,

இலக்கியம் சொன்ன தமிழாம்!

 

மன்னர்தம் கொடைத்திறம், களம்கண்ட படைத்திறம்

பாடிடும் பண்டு தமிழாம்!...

இன்னருள் இறைபுகழ் இதையத்தில் ஏற்றிடும்

இணையிலா மறையின் தமிழாம்!

 

அறிவியல், பொறியியல், ஆகாயவெளியியல்

ஆற்றலை ஆய்ந்த தமிழாம்!...

அப்துல் கலாமெனும் இணையிலா மனிதனை

உலகுக்கு தந்த தமிழாம்!

 

நீதிநெறி பாடியே நிலையாமை கூறியே

வாழ்வின் பொருளான தமிழாம்!

தமிழ்விடு தூதெனும் தனிநிகர் பாட்டுக்கு

பாடு பொருளான தமிழாம்!

 

இயல், இசை, கூத்தெனும் முத்தமிழ்

வடிவினில் மூன்று தமிழான தமிழாம்...

அயலாரின் ஆட்சியில் அவலங்கள் போக்கியே

தேசியம் காத்த தமிழாம்!

 

கம்பனை பாரதியை பொதுமறைதந்த வள்ளுவனை

உலகுக்கு தந்த தமிழாம்! – புது

அறிஞரை, ஆன்றோரை, அறிவியல் சான்றோரை

இனியும் தந்திடும் எங்கள் தமிழாம்!

0 comments: